எக்ஸ்போ 2020 ஐ பார்வையிட ஒரு நாளைக்கு ஒரு திர்ஹம்ஸ் மட்டுமே.. சிறப்பு சலுகையை அறிவித்த எக்ஸ்போ குழு..!!
உலகின் மிகப்பெரிய எக்ஸ்போ 2020 துபாய் கண்காட்சி முடிவதற்கு இன்னும் 50 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், மீதமுள்ள இந்த நாட்களில் எக்ஸ்போ 2020 தளத்தை சென்று பார்வையிடுவதற்கான சீசன் பாஸ் ஃபைனல் டிக்கெட்டிற்கான விலையை எக்ஸ்போ அமைப்பானது அதிரடியாக குறைத்துள்ளது.
அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்களில் எக்ஸ்போ 2020 துபாய் தளத்தை இதுவரை சென்று பார்வையிடாதவர்கள் அல்லது விலை அதிகம் என்பதனால் ஓரிரு முறை மட்டும் சென்று பார்வையிட்டவர்கள் இப்போது மீதமுள்ள இந்த 50 நாட்களும் வெறும் 50 திர்ஹம்ஸ் கட்டணத்தில் எக்ஸ்போ தளத்தை பார்வையிடலாம். அதாவது ஒரு நாளைக்கு ஒரு திர்ஹம் என்ற நம்ப முடியாத சலுகையை பார்வையாளர்களுக்காக எக்ஸ்போ குழு அறிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக வரம்பில்லாமல் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் எக்ஸ்போ தளத்தை சென்று பார்வையிடுவதற்கான சீசன் பாஸின் கட்டணமானது 495 திர்ஹம்சாக இருந்தது. மூன்று மாதங்கள் நிறைவுக்கு பின்னர் ஜனவரி முதல் கடைசி மூன்று மாதங்களுக்கான கட்டணம் 195 திர்ஹம்சாக குறைக்கப்பட்டது. தற்போது எக்ஸ்போ 2020 முடிய 50 நாட்களே உள்ள நிலையில், தற்போது இந்த சீசன் பாஸ் கட்டணம் மேலும் குறைக்கப்பட்டு 50 திர்ஹம்சாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, பிப்ரவரி 14 முதல் 18 வரை, சீசன் பாஸ் மற்றும் சீசன் பாஸ் ஃபைனல் டிக்கெட் வைத்திருப்பவர்கள் எக்ஸ்போ தளத்திற்கான ஒரு நாள் டிக்கெட்டை இலவசமாக பெற எக்ஸ்போவுக்கு நண்பரை அழைத்து வரலாம் எனவும் எக்ஸ்போ அமைப்பினர் கூறியுள்ளனர்.
மேலும் பிப்ரவரி 10 முதல், 275 திர்ஹம்ஸ் மதிப்புள்ள பிரீமியம் எக்ஸ்பீரியன்ஸ் ஒருநாள் டிக்கெட் மற்றும் சீசன் பாஸ் ஃபைனல் டிக்கெட் ஆகியவை மட்டுமே பார்வையாளர்களுக்கு கிடைக்கும் என்றும், மார்ச் 31, 2022 அன்று எக்ஸ்போவின் கதவுகள் மூடப்படும் வரை சீசன் பாஸ் வைத்திருப்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுளளது.
வார நாட்களில் அனுமதிக்கப்பட்டு வந்த 45 திர்ஹம் கட்டணத்திலான ஒருநாள் பாஸில் வார இறுதி நாட்களிலும் செல்லலாம் என்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீதமுள்ள நாட்கள் முழுவதும் வெறும் 50 திர்ஹம்ஸ் கட்டணத்திலேயே சென்று பார்வையிடலாம் என்ற அறிவிப்பை எக்ஸ்போ குழு நேற்று வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.