முடிவிற்கு வந்த மதிய வேலை தடை… இனி தொழிலாளர்கள் எப்பொழுதும் போல் வேலை செய்யலாம் என குவைத் அறிவிப்பு..!!
கோடை காலத்தில் தொழிலாளர்கள் வெயிலில் வாடுவதை தவிர்க்கும் விதமாக திறந்தவெளியில் வேலை செய்வதை தடுக்கும் சட்டமானது வளைகுடா நாடுகள் அனைத்திலும் அமலில் உள்ள நிலையில் குவைத் நாட்டிலும் அச்சட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை, காலை 11 மணி முதல் 4 மணி வரை திறந்த வெளிகளில் நண்பகலில் வேலை செய்வதைத் தடை செய்திருந்தது. இந்நிலையில் இந்த காலக்கெடு முடிவடைந்ததன் காரணமாக, இனி வழக்கம் போல் வேலை நேரம் கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செயல் இயக்குநர் ஜெனரல் Marzouq Al-Otaibi செய்தியாளர்களிடம் கூறிய பொழுது, கோடை காலங்களில் திறந்தவெளி பணியிடங்களில் தொழிலாளர்கள் பணி செய்யக்கூடாது என்ற சட்டமானது 2015 ஆம் ஆண்டு தீர்மானம் 535 இன் கீழ் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த சட்டத்தினை தவறாமல் கடைபிடித்து வரும் குவைத் நாடு, தொழிலாளர்களிடம் சட்டத்தினை குறித்த ஆய்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது.
மேலும், நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய இடைவேளையை சரியாக வழங்குகின்றனவா என்பதை சோதனை செய்வதற்காக தனியாக குழுக்களும் அமைத்து, விதிமுறையை மீறுபவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. எனினும், இந்த ஆண்டு மேற்கொண்ட சோதனையில் 362 இடங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் விதிமுறைகளை மீறிய தொழிலாளர்களின் எண்ணிக்கை 580 எட்டியது எனவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
அரசாங்கத்திற்கு ஒத்துழைக்காமல் விதிமுறைகளை தொடர்ந்து மீறும் நிறுவனங்கள் குறித்தும், தொழிலாளர்கள் குறித்தும், ஜெனரல் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனாலும், கோடைகால இடைவேளையானது முடிவிற்கு வரும் பட்சத்தில் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உதவிய நிறுவனங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் மனிதவள ஆணையத்துடன் ஒத்துழைத்தமைக்காக நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.