அமீரக செய்திகள்

அபுதாபிக்குள் நுழைவதற்கான விதிமுறைகளில் திருத்தம்..!! 4-ம் மற்றும் 8-ம் நாட்களில் PCR டெஸ்ட் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபிக்கு மற்ற பகுதிகளில் இருந்து வரும் நபர்கள் கொரோனாவிற்கான நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட்டை வைத்திருந்தால் மட்டுமே அபுதாபிக்குள் நுழைய முடியும் என கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டு அதன்படி தற்பொழுது வரையிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், அபுதாபி வரும் நபர்களின் கொரோனா சோதனைக்காக துபாய்-அபுதாபி எல்லை பகுதியான கன்தூத் (Ghantooth) பகுதியில் DPI சோதனை மையமும் அமைக்கப்பட்டது.

அபுதாபிக்குள் நுழையும் நபர்கள் 48 மணி நேரத்திற்குள் பெறப்பட்டிருக்கும் கொரோனாவிற்கான PCR அல்லது DPI சோதனை முடிவை வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபிக்கு வந்து தொடர்ந்து ஆறு நாட்கள் தங்கியிருக்கும் நபர்கள் ஆறாவது நாளில் கொரோனாவிற்கான PCR சோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்பொழுது கொரோனா தொற்றுநோய்க்கான அபுதாபி அவசர நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மைக் குழு இன்று (புதன்கிழமை) அபுதாபிக்குள் நுழைவதற்கான செயல்முறைகளில் திருத்தம் செய்து புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளானது வரும் நவம்பர் 8 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் 8, ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் விதிகள்:

  •  முதலில், கொரோனாவிற்கான சோதனை (PCR அல்லது DPI) எடுக்க வேண்டும்.
  • அபுதாபிக்குள் கொரோனாவிற்கான எதிர்மறை சோதனை முடிவைப் பெற்ற 48 மணி நேரத்திற்குள் நுழைய வேண்டும்
  • அபுதாபியில் தொடர்ந்து 4 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தங்கியிருக்கும் போது, அபுதாபிக்குள் நுழைந்த நான்காவது நாளில் PCR சோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
  • அபுதாபியில் தொடர்ந்து 8 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தங்கியிருக்கும் போது, அபுதாபிக்குள் நுழைந்த எட்டாவது நாளில் மற்றுமொரு PCR சோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
  • அபுதாபிக்குள் நுழையும் நாளானது முதல் நாளாக கணக்கில் கொள்ளப்படும்.
  • தற்பொழுது நடைமுறையில் இருக்கும் ஆறாவது நாள் மேற்கொள்ளும் PCR சோதனையானது வரும் 8 ம் தேதி முதல் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கும் (அபுதாபி குடியிருப்பாளர்கள் உட்பட) இந்த விதி பொருந்தும் என்றும், மேலும் 4 மற்றும் 8 ஆம் நாட்களில் PCR சோதனைகளை எடுக்கத் தவறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவிற்கான தடுப்பூசி சோதனைகளை மேற்கொள்ளும் தன்னார்வலர்கள் மற்றும் அவசரகால பயன்பாட்டு திட்டத்தின் கீழ் கொரோனா தடுப்பூசி பெறுபவர்களுக்கு இந்த விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!