இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு ஜூன் 14 வரை விமான சேவையை ரத்து செய்த எமிரேட்ஸ் நிறுவனம்..!!
இந்தியாவில் நிலவி வரும் அதிகளவு கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியாவில் இருந்து அமீரகம் வரும் விமானங்களுக்கு தற்காலிகத் தடை விதித்து பின்னர் இத்தடையானது மறு அறிவிப்பு வரும் வரையிலும் நீட்டிக்கப்படுவதாக அமீரகத்தின் தேசிய அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு பயணிகள் விமான சேவையினை வரும் ஜூன் 14 ம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக துபாயை மையமாக கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
அதே போல், கடந்த 14 நாட்களில் இந்தியா வழியாக டிரான்ஸிட் விமானங்கள் மூலமாக பயணம் செய்த பயணிகளுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் எமிரேட்ஸ் மேலும் கூறியுள்ளது.
திருத்தப்பட்டு வெளியிடப்பட்ட கோவிட் -19 நெறிமுறைகளுக்கு இணங்க ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள், ஐக்கிய அரபு அமீரக கோல்டன் விசாக்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வைத்திருக்கும் நபர்களுக்கு இத்தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.