அமீரக செய்திகள்

இந்தியா-அமீரகம் இடையே விமான கட்டணம் குறைய வாய்ப்புள்ளதா..?? முடிவுக்கு வருமா சர்வதேச விமானப் போக்குவரத்து தடை..??

இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு கொரோனா பாதிப்பு அதிகரித்த கடந்த வருட மார்ச் மாதத்தில் இருந்து தடை நீடித்து வருகிறது. ஒன்றரை வருடமாக நீடித்து வரும் இத்தடையானது நவம்பர் மாதம் முதல் நீக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அவ்வாறு தடை நீக்கப்பட்டு இந்தியாவிற்கும் அமீரகத்திற்கும் மீண்டும் சர்வதேச விமானப் போக்குவரத்து துவங்க ஆரம்பித்தால் பயணிகளுக்கான விமானக் கட்டணம் குறைய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் அமீரகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்கால சீசன் துவங்கியுள்ளதாலும் எக்ஸ்போ, குளோபல் வில்லேஜ் போன்ற நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதையும் அடுத்து சுற்றுலாவாசிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு வருவோரின் எண்ணிக்கையும் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்பதால் சர்வதேச விமானப் போக்குவரத்தை துவக்குவது பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தற்பொழுது ஏர் பபுள் ஒப்பந்த அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையிலேயே விமானங்கள் இயங்கி வருவதால் டிக்கெட்டின் விலை சற்று கூடுதலாக உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்தியாவில் இருந்து அமீரகம் பயணிக்கும் போது அமீரக விதிமுறையின் படி விமானம் புறப்படுவதற்கு ஆறு மணி தேரத்திற்குள் ரேபிட் PCR சோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கான கட்டணத்தையும் பயணிகளே செலுத்தி வருவது மட்டுமல்லாமல் விமான நிலையங்களைப் பொறுத்து கட்டணத்தில் ஒரு சில மாறுபாடும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்ததை அடுத்து வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாவாசிகள் அக்டோபர் 15 முதல் சார்ட்டர் விமானங்களில் நாட்டிற்குள் வரலாம் என்றும் நவம்பர் 15 முதல் சார்ட்டர் அல்லாத மற்ற விமானங்களில் பயணிக்கலாம் எனவும் இந்திய அரசு அறிவித்திருந்தது.

அத்துடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான v.முரளிதரன் கடந்த சில தினங்களுக்கு முன் அமீரகத்திற்கு வந்திருந்த போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருப்பதால் அமீரகம் மற்றும் இந்தியா இடையேயான விமானப் போக்குவரத்து வரும் நாட்களில் மிக எளிதாக இருக்கும் என்று அறிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இந்தியா சர்வதேச விமானப் போக்குவரத்தை மீண்டும் துவக்கி கொரோனாவிற்கு முன் இருந்தபடி விமானங்களை இயக்க வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த கருத்தாகவும் இருக்கின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!