அபுதாபியின் முதல் இந்து கோயிலில் சிற்பங்கள் பதிக்கும் பணிகள் தொடக்கம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் முதல் பாரம்பரிய இந்து கோயில் கட்டப்பட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. இதற்கான பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சிற்பங்களை பதிக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது.
அபுதாபியில் உள்ள BAPS இந்து மந்திர் தளத்தில் ‘பிரதம் ஷிலா ஸ்தாபன் சப்தா (Pratham Shila Sthaapan Saptah)’ என்றழைக்கப்படும் இந்த விழா நவம்பர் 16 வரை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இளஞ்சிவப்பு மணற்கற்கள் ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் 2,000 க்கும் மேற்பட்ட சிற்பிகளால் கையால் செதுக்கப்பட்ட பின்னர் இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த வரலாற்றுத் திட்டத்தில் 17 சிற்பங்களை செதுக்கும் கைவினைஞர்கள் கொண்ட குழு பணியாற்றியுள்ளது.
கடந்த 2018 ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு தற்பொழுது கட்டப்பட்டு வரும் கோவிலுக்கான தனித்துவமான செதுக்கப்பட்ட சிற்பங்கள் இந்திய மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் 2,000 க்கும் மேற்பட்ட சிற்பிகளால் செதுக்கப்பட்டுள்ளது. கையால் செதுக்கப்பட்ட சிற்பம் இந்தியாவின் வளமான கலாச்சாரத்தையும் வரலாற்றையும் பிரதிபலிக்கிறது. இதில் இந்திய காவியங்களான ராமாயணம், மகாபாரதம் மற்றும் இந்து வேதங்கள் மற்றும் புராணங்களின் பிற கதைகளும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெவ்வேறு அளவுகளில் கையால் செதுக்கப்பட்ட ஒவ்வொரு சிற்பமும் இந்தியாவின் வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றைக் காட்டுகிறது மற்றும் அரபு சின்னங்களையும் இது உள்ளடக்கியுள்ளது.
இந்த கோவிலில் கோயில் வளாகத்தை சுற்றி வரும் நீர் அம்சங்கள், நுழைவுப் படிகளை சுற்றியுள்ள இரண்டு நீர்வீழ்ச்சிகள், பார்வையாளர் மையம், பிரார்த்தனை அரங்குகள், நூலகம், வகுப்பறை, சமூக மையம், ஆம்பிதியேட்டர், விளையாட்டு பகுதிகள், தோட்டங்கள், புத்தகங்கள் மற்றும் பரிசுக் கடைகள் போன்ற பல்வேறு வசதிகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த கோவில் 2023ல் கட்டி முடிக்கப்பட்டு குறைந்தபட்சம் 1,000 ஆண்டுகள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.