குவைத் நாட்டின் மன்னர் ‘ஷேக் சபா அல் அஹ்மத்’ அவர்கள் மரணம்..!! தலைவர்கள் இரங்கல்..!!
குவைத் நாட்டின் மன்னர் “எமிர் ஷேக் சபா அல் அஹ்மத்” அவர்கள் தற்சமயம் உயிரிழந்து விட்டதாக அமிரி திவானின் துணை அமைச்சர் ஷேக் அலி அல் ஜர்ரா அல் சபா இன்று குவைத் தொலைக்காட்சியில் அறிவித்துள்ளார். உயிரிழந்த குவைத் எமிர் ஷேக் சபா அல் அஹ்மத் அவர்களுக்கு தற்போது வயது 91 என்பது குறிப்பிடத்தக்கது.
சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக ஜூலை 18 அன்று எமிர் ஷேக் சபா அல் அஹ்மத் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் வெற்றிகரமான அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஜூலை 23 ஆம் தேதி அன்று மருத்துவ சிகிச்சைகளுக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டார். எனினும் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதற்கான காரணம் அல்லது அமெரிக்காவில் மேற்கொள்ளவிருக்கும் மறுத்துவ சிகிச்சை குறித்த விவரங்களை எமிரின் அலுவலகம் இதுவரையிலும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
குவைத் எமிர் ஷேக் சபா அல் அஹ்மத் அவர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து மற்ற வளைகுடா நாடுகளின் தலைவர்களும், மற்றும் பிற உலக நாடுகளின் தலைவர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.