தேசிய தின கொண்டாட்டத்தின் போது பல வாகனங்களை பறிமுதல் செய்த துபாய் காவல்துறை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் 51வது தேசிய தின கொண்டாட்டத்தின் போது போக்குவரத்து விதிகளை மீறியதற்காக துபாய் காவல்துறை 132 வாகனங்களை பறிமுதல் செய்ததுடன், வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பவர்கள், வாகனங்களின் நிறத்தை மாற்றியமைத்தல், அனுமதியின்றி வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டுதல், கார்களில் இருந்து குப்பைகளை அள்ளுதல், அஜாக்கிரதையாக ஓட்டி தங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை விளைவித்தவர்கள் மீது போக்குவரத்து கருப்பு புள்ளிகளும் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் 51வது தேசிய தினத்தின் போது போக்குவரத்து விதிகளை மீறியதற்காக பர் துபாயில் 4,697 வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் பர் துபாயில் 72 வாகனங்களும், தேராவில் 60 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக துபாய் காவல்துறையின் போக்குவரத்து பொதுத் துறையின் செயல் இயக்குநர் பிரிகேடியர் ஜுமா சலேம் பின் சுவைதான் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான விதிமீறல்கள் பர் துபாய் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போக்குவரத்து நெரிசலைத் தடுக்கவும், சில ஓட்டுநர்களின் தவறான நடத்தையைக் கட்டுப்படுத்தவும் மற்றும் சாலை பாதுகாப்பை பராமரிக்கவும் போக்குவரத்து பொதுத் துறையானது அமீரகத்தின் பல்வேறு உள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் போக்குவரத்து ரோந்துகளை தீவிரப்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த ஆண்டு தேசிய தின கொண்டாட்டத்தின் போது போக்குவரத்து நிலைமையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது என்றும் இது காவல்துறையினருடன் சாலையை பயன்படுத்தும் பொதுமக்களின் சிறந்த ஒத்துழைப்பைக் குறிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.