மக்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது ஹோட்டலுக்குள் திடீரென்று புகுந்த கார்… ஓட்டுநரை கைது செய்த சவூதி போலீஸ்..!!
சவுதி அரேபியாவின் தெற்கு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில், மக்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது திடீரென்று கார் தடுமாறி உள்ளே புகுந்த வீடியோ வைரலாகி தற்பொழுது பகிரப்பட்டு வருகின்றது. சவூதி அரேபியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஷரூராவில் அமைந்துள்ள உணவகத்தில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.
உணவகத்தின் முகப்பை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த கார் முதலில் கேஷியர் மீது மோதியதால் அவர் படுகாயம் அடைந்துள்ளார். அதற்குப் பின்னர் முதல் இருக்கையில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த மூன்று வாடிக்கையாளர் மீதும் மோதியது.
அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை. சம்பவத்தை கேள்விப்பட்டதும் போலீசார் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து ஓட்டுநரை கைது செய்து பொருட்களை அப்புறப்படுத்தினர்.
விபத்துக்கான காரணம் கண்டறிய முதற்கட்ட விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது. சவுதி அரேபியாவின் போக்குவரத்து சட்டத்தின்படி அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு 150 ரியாலில் இருந்து 2,000 ரியால் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், சிறை தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
விசாரணைக்கு பின்பு, ஓட்டுநரின் மீது சம்பந்தப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.