UAE: ஈத் அல் அத்ஹாவை முன்னிட்டு மூன்று நாட்கள் நடைபெறவுள்ள வான வேடிக்கை நிகழ்ச்சி..!!
அபுதாபியின் முதன்மையான ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு மையமான யாஸ் ஐலேண்ட், அபுதாபியின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை (DCT Abudhabi) உடன் இணைந்து, ஈத் அல் அத்ஹாவின் போது வான வேடிக்கை நிகழ்ச்சிகளுடன் விமரிசையாக கொண்டாடவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வான வேடிக்கை நிகழ்வானது ஈத் அல் அத்ஹாவின் முதல் நாளிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்களின் இரவுகளில் நடைபெறும் என்றும், யாஸ் பே வாட்டர்ஃபிரண்டில் (Yas Bay waterfront) இருந்து ஒவ்வொரு இரவும் இரவு 9 மணிக்கு வான வேடிக்கைகள் நிகழ்த்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
யாஸ் ஐலேண்டின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கூட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளதால், இது யாஸ் தீவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் மக்கள் அதில் சென்று கண்டுகளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.