கடுமையாக வீசிய மணல்புயலால் பாதிக்கப்பட்ட 1,000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி..!! சவூதியில் நிகழ்ந்த சம்பவம்..!!
சவூதி தலைநகர் ரியாத்தில் செவ்வாய்கிழமை வீசிய கடுமையான மணல் புயல் காரணமாக, சுவாசக் கோளாறால் சுமார் 1,285 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் உருவான இந்த மணல் புயலானது சவூதியின் ரியாத் மற்றும் கிழக்கு மாகாணத்திலும் தனது கடுமையை காட்டியுள்ளது.
மணல்புயல் ஏற்பட்டதன் காரணமாக ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தூசியில் இருந்து பாதுகாப்பு பெற முகக்கவசம் அணிவதை பரிந்துரைக்க சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் சவூதியின் ரியாத், கிழக்கு மாகாணம், புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனா மற்றும் சவூதி அரேபியாவின் தென்மேற்கு பகுதி உள்ளிட்ட பகுதிகளில் தூசிப்புயலானது இன்றும் நிலவி தெரிவுநிலையை பாதிக்கும் என்று சவுதி தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த தூசிபுயலானது ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார் உள்ளிட்ட பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளில் சமீப காலங்களில் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றது. பொதுவாகவே பருவகாலங்கள் மாறும்போது இத்தகைய மணல் மற்றும் தூசிபுயல் உருவாவது மத்திய கிழக்கு நாடுகளில் வழக்கமான ஒன்றேயாகும். சில சமயங்களில் மிதமானதாகவும் ஒரு சில நேரங்களில் மிக கடுமையாகவும் நிகழ்வது குறிப்பிடத்தக்கது.