ஓமான்: 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோருக்கு தடுப்பூசி பிரச்சாரம் துவக்கம்..!! சுகாதார அமைச்சகம் தகவல்..!!
ஓமானில் உள்ள அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தடுப்பூசி போடுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசு மையங்களுக்குச் செல்வதற்கு முன் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களை முன்பதிவு செய்யுமாறு சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
18 வந்து மற்றும் அதற்கு மேற்பட்ட தடுப்பூசி போடத் தகுதியுடையவர்களுக்கான இந்த புதிய கட்ட தடுப்பூசி பிரச்சாரம் இன்று (ஜூலை 4 ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்கியுள்ளது.
உத்தியோகபூர்வ மதிப்பீடுகளின்படி, நோய்த்தடுப்புக்கான தேசிய பிரச்சாரம் தற்போது 900,000 க்கும் அதிகமான மக்களை உள்ளடக்கியுள்ளது.
ஓமான் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் (OCEC, Oman Convention and Exhibition Centre) வார நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையும், வார இறுதி நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் இந்த சேவை இருக்கும்.
“உங்கள் அப்பாய்மெண்டை Tarassud+ அப்ளிகேஷன் அல்லது http://covid19.moh.gov.om மூலம் பதிவு செய்யுங்கள். பின், உங்கள் அப்பாய்மெண்ட் உறுதிப்படுத்தலுடன் ஒரு sms மற்றும் நீங்கள் மையத்திற்கு வரும்போது காண்பிக்க ஒரு பார்கோடு பெறுவீர்கள்” என்று MOH கூறியுள்ளது.
இதற்கிடையில், பல வெளிநாட்டவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனைகள் மூலம் தடுப்பூசிகளைப் பெற்று வருகின்றனர். இதற்கும் முன் பதிவுகள் தேவை என கூறப்பட்டுள்ளது.
மேலும் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசி மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இது வரும் நாட்களில் செயலாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனா நோயாளிகள் மற்றும் வைரஸ் தடுப்பூசிகள் தொடர்பான தவறான தகவல்கள் குறித்த ஆடியோ செய்திகள் குறித்து சுகாதார அமைச்சகம் (MoH) தெளிவுபடுத்தியுள்ளது.
தடுப்பூசி பெறும் நபருக்கு கொரோனா நோயின் அறிகுறிகள் ஏதும் இல்லை என்றால் தடுப்பூசிகளைப் பெறுவதற்கு முன்பு எந்த சோதனைகளையும் நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும், ஒரு நபருக்கு இரு வேறு தடுப்பூசிகள் செலுத்துவதால் எவ்வித ஆபத்து இல்லையென்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
ஃபைசர் பயோடெக் அல்லது ஆக்ஸ்போர்டு / அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளில் எந்த கொரோனா வைரஸும் இல்லை என்று MOH மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மாறாக வைரஸ் உடலில் நுழையும் போது அதை எதிர்க்க நோயெதிர்ப்பு மண்டலத்தை செயல்படுத்தும் வைரஸ் கூறுகள் அதில் உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக சேனல்களை மேலதிக தகவல்களுக்கு பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.