அமீரக செய்திகள்

அமீரகத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை… வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த அமைச்சகம்…!!

அமீரகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக தொடர்ந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. வானிலையில் காணப்படும் இந்த நிலையற்ற தன்மையால் வாகன ஓட்டிகளும் குடியிருப்பாளர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது பற்றி அமைச்சகம் தெரிவிக்கையில், “மாறுபட்ட தீவிரம் கொண்ட மழையின் காரணமாக வெள்ளம் ஏற்படும் அபாயமும் பள்ளத்தாக்குகள் வழியாக நீர் பாயக்கூடிய அபாயமும் இருக்கலாம்” என்று கூறியுள்ளது. மேலும் வேகமாக வீசக்கூடிய காற்றினால் கடல் சீற்றமாக இருக்கும் என்றும் அதனால் அதிக உயரத்திற்கு அலைகள் ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வானிலை தொடர்பான விபரங்களை வெளியிடும் Storm_centre, ராஸ் அல் கைமாவில் உள்ள ஜெபல் ஜெய்ஸ் செல்லும் சாலையில் நீர்வீழ்ச்சிகள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காணொளியை வெளியிட்டு இருக்கின்றது.

நாடு முழுவதும் கடந்த வியாழக்கிழமை முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது. திங்களன்று, அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான் மற்றும் ராஸ் அல் கைமாவின் சில பகுதிகளில் மழை பெய்ததாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.

தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) பகிர்ந்துள்ள வீடியோவில், அஜ்மானில் கனமழை மற்றும் வெள்ளம் நிறைந்த சாலை காட்டப்பட்டுள்ளது.

கடந்த 18 மாதங்கள் இல்லாத அளவில் ஐக்கிய அரபு அமீரகம் அதிக மழையை கண்டுள்ளதால், 2020 எக்ஸ்போ துபாயில் உள்ள ஜெர்மனி பெவிலியன் மற்றும் குளோபல் வில்லேஜ் உள்ளிட்ட முக்கிய பொழுதுபோக்கு இடங்கள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டன. மோசமான வானிலை காரணமாக துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் வானவேடிக்கையும் ரத்து செய்யப்பட்டது.

அமீரகத்தில் நிலவும் இந்த நிலையற்ற வானிலை புதன்கிழமைக்குள் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!