UAE: ரமலான் மாதத்திற்கான கடுமையான விதிமுறைகளை அறிவித்த அதிகாரிகள்..!! மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை..!!
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் துவங்குவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், ரமலான் மாதத்தில் பொதுமக்கள் பின்பற்றவேண்டிய கொரோனாவிற்கான பாதுகாப்பு நடவடிக்கைளை அமீரக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த பாதுகாப்பு நடவடிகைகள் வைரஸ் பரவுவதற்கு வழிவகுக்கும் எந்தவொரு கூட்டத்தையும் தவிர்ப்பதே நோக்கமாகக் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NECMA) செய்தித் தொடர்பாளர் டாக்டர் சீஃப் அல் தஹேரி அவர்கள் இந்த வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளார்.
தராவீஹ் தொழுகை: புனித மாதத்தில் நடத்தப்படும் சிறப்பு தராவீஹ் தொழுகையானது நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் நடத்தப்படும் என்றும் தாராவீஹ் மற்றும் இஷா தொழுகைக்கான மொத்த நேரமாக 30 நிமிடங்களில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றாக கூடுவதை தவிர்க்கவும், குறிப்பாக இப்தாரின் போது கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
- வீடுகளுக்கும் குடும்பங்களுக்கும் இடையில் உணவு விநியோகம் மற்றும் உணவுகள் பரிமாற்றிக்கொள்வதை தவிர்க்கவும்.
- ஒரே வீட்டில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே உணவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
- ரமலான் மாதத்திற்கான இப்தார் கூடாரங்கள் குடும்பமாக இருந்தாலும், நிறுவனமாக இருந்தாலும் தடை செய்யப்பட்டுள்ளது.
- மசூதிகளுக்குள் இப்தார் உணவு அனுமதிக்கப்படாது
- உணவகங்கள் இப்தார் உணவை தங்கள் உணவகங்களுக்குள்ளேயோ அல்லது அதற்கு உணவகங்களுக்கு முன்னாலோ விநியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
- நிர்வாகத்துடன் நேரடி ஒருங்கிணைப்பு மூலம் இப்தார் உணவு விநியோகம் தொழிலாளர் வீட்டு வளாகங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, தற்பொழுது அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உலகளாவிய மற்றும் உள்ளூர் சுகாதார நிலைமைகளின் அடிப்படையில் மாற்றத்திற்கு உட்பட்டவை என்றும் முதியவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எந்தவிதமான கூட்டங்களையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் அறிவித்திருக்கும் கொரோனாவிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் அனைவரும் முறையாகக் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ரமலான் மாதத்தின் போது தீவிர ஆய்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.