துபாயில் நடந்த சர்வதேச ‘ஜூனியர் ஃபேஷன் ஷோ’..!! டைட்டிலை வென்று அசத்திய தமிழக சிறுவன்..!!
துபாயில் கடந்த வாரம் நடந்து முடிந்த சிறிய குழந்தைகளுக்கான சர்வதேச ஜூனியர் ஃபேஷன் ஷோவில் கலந்துகொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த 6 வயது சிறுவன் பட்டம் வென்று அனைவரின் பாராட்டையும் பெற்று அசத்தியுள்ளார்.
உலகளவிலான சிறிய குழந்தைகளுக்கான சர்வதேச ஜூனியர் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியானது கடந்த வாரம் 23, 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் துபாயில் நடைபெற்றது. இந்த ஃபேஷன் ஷோவில் இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை சேர்ந்த ராணா சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டு, இப்போட்டியில் கலந்து கொண்டு பட்டத்தையும் வென்றுள்ளார். மேலும் இவரே தமிழ்நாட்டிலிருந்து கலந்துகொண்ட முதல் சிறுவனும் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது மூன்று வயதிலிருந்தே ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்று வரும் ராணா சிவகுமார், கோயம்புத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார். முதல் முறையாக கோயம்புத்தூரில் நடந்த ஃபேஷன் ஷோவில் பங்கேற்று முதல் பரிசை வென்ற ராணா தொடர்ந்து பெங்களூர், கோயம்புத்தூர், சேலம், சென்னை ஆகிய இடங்களில் நடந்த ஜூனியர் ஃபேஷன் ஷோக்களில் கலந்துகொண்டு விருதுகளையும் வென்றுள்ளார். மேலும் இவர் மாடலிங், விளம்பரம் மற்றும் ஒரு சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கோவையை இருப்பிடமாக கொண்ட ராணாவின் தந்தை சிவக்குமார் மற்றும் தாய் கோமதி ஆகிய இருவரும் இது குறித்து கூறுகையில், “ராணா தனது மூன்று வயதிலிருந்தே ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்று வருகிறார். தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் இதுவரை 15 க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளார். தற்போது துபாயில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் பேஷன் ஷோவில் பங்கேற்று அதிலும் முதலிடம் பிடித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளனர்.
துபாயில் நடந்து முடிந்த இந்த ஜூனியர் பேஷன் ஷோவில் சுமார் 15 நாடுகளைச் சேர்ந்த மாடல்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவராக தமிழ்நாட்டிலிருந்து முதன்முறையாக கலந்துகொண்ட முதல் சிறுவன் என்ற பெருமையை ராணா சிவகுமார் பெற்றதும் அல்லாமல், அந்த போட்டியில் கலந்துகொண்ட மற்ற நாட்டவர்களையெல்லாம் பின்னுக்கு தள்ளி சர்வதேச ஜூனியர் மாடல் என்ற பட்டத்தையும் வென்று அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.