துபாயில் மீண்டும் தொடங்கும் “3-நாள் துபாய் சூப்பர் சேல்”..!! 90 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்கும் 500 பிராண்டுகள்..!!
துபாயின் மிகப்பெரிய தள்ளுபடி விற்பனை நிகழ்வுகளில் ஒன்றான “3-நாள் துபாய் சூப்பர் சேல்” இந்த வாரம் மீண்டும் தொடங்கவுள்ளது. இந்த வருடத்தின் இரண்டாவது மிகப் பெரிய தள்ளுபடி விற்பனையான இந்த சூப்பர் சேல், வரும் நவம்பர் 25 வியாழன் முதல் நவம்பர் 27 சனிக்கிழமை வரை என மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இந்த 3 நாள் விற்பனையில் துபாயில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் முழுவதும் உள்ள ஃபேஷன் ஆடைகள், வீட்டு அலங்கார பொருட்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் ஆகியவற்றில் 90 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்கும்.
மேலும் இந்த சூப்பர் சேல் விற்பனையில் பங்கேற்கும் துபாயில் உள்ள 2,000 விற்பனை அவுட்லெட்டுகளில் 500 க்கும் மேற்பட்ட பிராண்டுகளுக்கு 90 சதவீதம் வரை விலை குறைப்பு செய்யப்படும்.
துபாய் திருவிழாக்கள் மற்றும் சில்லறை நிறுவனங்களின் (DFRE) தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மத் அல் காஜா இந்த சூப்பர் சேல் விற்பனை குறித்து கூறுகையில், “இது இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில்லறை நிகழ்வுகளில் ஒன்றாகும். இது முழு குடும்பத்திற்கும் கேளிக்கை நிகழ்வுகள், சிறப்பான தள்ளுபடிகள் மற்றும் பிரத்யேக பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்புகளை வழங்கும் முக்கிய சிறப்பம்சமாகும்” என்று தெரிவித்துள்ளார்
மேலும் கூறுகையில் இது துபாயின் சில்லறை விற்பனைத் துறையை முழுமையாக ஆதரிக்கிறது, மேலும் இந்த ஷாப்பிங் திருவிழாவின் இரண்டாவது கட்டத்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைவருக்கும் மீண்டும் கொண்டு வருவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
இந்த சூப்பர் சேல் விற்பனையில் பங்கேற்கும் அனைத்து மால்கள் மற்றும் விற்பனை நிலையங்களிலும் கட்டாய முகக்கவசங்கள் மற்றும் சமூக இடைவெளி தேவைகள் உட்பட கொரோனா தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் வகுத்துள்ள தேவைகளுக்கு ஏற்ப கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.