ஷார்ஜாவில் கிரேன் சரிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளி..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கிரேன் சரிந்து விழுந்ததில் 36 வயதான ஆசிய தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஷார்ஜாவில் இன்று (வியாழக்கிழமை) காலை கிரேன் திடீரென சரிந்து விழுந்ததில் ஆசிய நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நடந்தபோது அந்த நபர் அமீரகத்தின் அல் மடம் (Al Madam) பகுதியில் உள்ள வேலை நடக்கும் ஒரு இடத்தில் (site) தனது வேலையைச் செய்து கொண்டிருந்துள்ளார். இந்த விபத்து நிகழ்ந்ததை தொடர்ந்து ஷார்ஜா காவல்துறையினர், துணை மருத்துவர்களுடன், உடனே அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். இருந்த போதிலும், அந்த நபர் கிரேன் மூலம் நசுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த நிகழ்வை தொடர்ந்து விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரும் புலனாய்வாளர்களும் விபத்து நடந்த இடத்திற்கு வந்தபோது, கிரேன் இடிந்து விழுந்த போது அங்கு பணியை மேற்கொண்டு வந்த ஒப்பந்த நிறுவனத்தின் செக்யூரிட்டி மற்றும் பாதுகாப்பு மேற்பார்வையாளர்கள் அவர்கள் வருவதற்கு முன்னதாகவே அவ்விடத்தை விட்டு ஓடியுள்ளனர் என்றும், தற்பொழுது அதிகாரிகள் அவர்களைக் கண்டுபிடித்து காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழிலாளியின் உடலை சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்காக ஷார்ஜாவில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.