அமீரக செய்திகள்

UAE: பிப்ரவரி மாத இறுதிக்குள் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும்.. NCEMA அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவல் மீண்டும் பரவ தொடங்கியதை அடுத்து, சுற்றுலா தலங்கள் மற்றும் ஷாப்பிங் மால்களில் அமல்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கையின் வரம்புகள் உள்ளிட்ட கோவிட்-19 தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் இம்மாதத்தின் மூன்றாவது வாரத்தில் முழுமையாக நீக்கப்படும் என்று அதிகாரிகள் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.

தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) நடத்திய வாராந்திர கோவிட்-19 மாநாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் குறித்த இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தவிர பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் பல்வேறு போக்குவரத்து வசதிகளில் மக்களின் திறன் உயர்த்தப்படும் என்றும் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு குறித்து தேசிய நெருக்கடி மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையத்தின் (NCEMA) அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர் சைஃப் அல் தாஹேரி கூறுகையில், “கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு பிப்ரவரி நடுப்பகுதியில் அதிகபட்ச திறனை எட்டும்” என்று கூறியுள்ளார். அதேபோன்று திருமணங்கள், நிகழ்வுகள் மற்றும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பவர்களின் அதிகபட்ச திறனை உயர்த்தவும் NCEM முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூக கூட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்ட விருந்தினர்களின் அதிகபட்ச எண்ணிக்கையை அந்தந்த எமிரேட்கள் நிர்ணயிக்கும் என்றும், ஒவ்வொரு எமிரேட்டுக்கும் அதிகபட்ச திறனை சரிசெய்து, தங்களுக்கு ஏற்றவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடுமையாக்குவதற்கான அல்லது எளிதாக்குவதற்கான விருப்பம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், Al Hosn செயலியில் கிரீன் பாஸ் தேவைகள் தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் விளக்கமளித்துள்ளார்.

எனினும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொரோனா பரவலை தொடர்ந்து கண்காணித்து புதிய நடவடிக்கைகளை அவ்வப்போது மதிப்பாய்வு செய்வார்கள் என்றும், மேலும் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி பராமரிக்கப்படுவதை உறுதி செய்தல் போன்ற அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் அதிகாரிகள் உறுதி செய்வார்கள் என்றும் தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபுஅமீரகம் முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்ததைத் தொடர்ந்து இந்த முடிவானது எடுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!