UAE கொரோனா தடுப்பூசி பிரச்சாரம்: தேசத்தை பாதுகாக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அபுதாபி அரசு வலியுறுத்தல்..!!
கொரோனா வைரசிற்கு எதிராக அமீரகத்தில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான ஒரு பிரச்சாரத்தை அபுதாபி அரசானது திங்களன்று துவங்கியுள்ளது. இந்த தடுப்பூசி பிரச்சாரமானது அபுதாபி சுகாதாரத்துறை மற்றும் அபுதாபி பொது சுகாதார மையத்தின் மேற்பார்வையின் கீழ் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரத்தின் கீழ் அபுதாபியில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களும் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசியினைப் போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள குடிமக்கள் குடியிருப்பாளர்கள் என அனைவரும் கொரோனாவிற்கான தடுப்பூசியினை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அபுதாபியில் கொரோனாவிற்கான பாதுகாப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அளவிலான கொரோனாவிற்கான ஸ்க்ரீனிங் பரிசோதனை மற்றும் தொற்றுநோயை நிர்வகிப்பதற்கான அபுதாபியின் கடுமையான அணுகுமுறை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் அபுதாபியில் நடத்தப்பட்ட மொத்த சோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 0.39 சதவீதம் என மிகக் குறைந்த விகிதத்தை வெற்றிகரமாக பராமரிக்க உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி பிரச்சாரம் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் இதுவரை அடைந்த சுகாதார சாதனைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் பொதுமக்களை பாதுகாப்பதில் அபுதாபி அரசனது தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியின் சுகாதாரத் துறையின் தலைவர் ஷேக் அப்துல்லா பின் முகமது அல் ஹமேட் அவர்கள் இது குறித்து கூறுகையில், “கோவிட் -19 தொற்றுநோய் முன்னோடியில்லாத வகையில் உலகிற்கு பெரிய சவால் விடுத்துள்ளது. அபுதாபியில், எங்கள் சமூகத்தைப் பாதுகாப்பதற்கும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கும் முன்னுரிமை அளித்ததில் பெருமிதம் கொள்கிறோம். அதே நேரத்தில், பிற உலகளாவிய தலைவர்களுடன் கூட்டு சேர்ந்து கொரோனாவிற்கான தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதில் பங்களித்த மருத்துவ பரிசோதனைகளில் ஒன்றிணைந்து பங்கேற்றியுள்ளோம். அதன் பலனாக தற்பொழுது அமீரகத்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், “தற்பொழுது துவங்கியுள்ள இந்த புதிய ஆண்டில், எங்கள் மக்கள் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த நாங்கள் விரும்புகிறோம். அதனால்தான் தடுப்பூசிகள் அவர்களின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரத்தை உறுதிப்படுத்த கடுமையான சோதனைகளுக்கு உட்பட்டுள்ளன. உங்கள் உடல்நலம் மற்றும் நமது தேசத்தின் பாதுகாப்பு கருதி தடுப்பூசி போடுவதை நீங்கள் தேர்வு செய்வீர்கள் என்று நம்புகிறேன்” என்றும் கூறியுள்ளார்.
அபுதாபியின் சுகாதாரத் துறை துணைச் செயலாளர் டாக்டர் ஜமால் முகமது அல்காபி அவர்கள் கூறியதாவது: “அங்கீகரிக்கப்பட்ட கோவிட் -19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. மேலும் தடுப்பூசி பெறுபவர்களுக்கு தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். எல்லோரும் தடுப்பூசி போடுவதைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அபுதாபி பொது சுகாதார மையத்தின் இயக்குநர் ஜெனரல் மாதர் சயீத் அல் நுவைமி கூறுகையில் “தடுப்பூசி போடுவது பாதுகாப்பாக இருக்க எளிய மற்றும் மிகச் சிறந்த வழியாகும். உலக வரலாற்றை எடுத்துக்கொண்டால், தடுப்பூசிகள் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளன. நாம் கொரோனாவிற்கு எதிராக மீண்டும் போராடாவிட்டால் கோவிட் -19 மறைந்துவிடாது. அதற்கான மிகச் சிறந்த வழி தடுப்பூசிகள்தான். வைரஸ் தொற்று பரவும் சங்கிலியை உடைப்பதற்கும், இந்த தொற்றுநோய்க்கு எதிரான வெற்றியின் ஒரு பகுதியாக இருப்பதற்கும் அனைவரும் தடுப்பூசி போடுவார்கள் என்று நம்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.