அபுதாபி தீவிபத்து: 3 எரிபொருள் டேங்கர் வெடித்ததில் 2 இந்தியர் உட்பட 3 பேர் பலி..!! 6 பேர் காயம்….
அபுதாபியில் இன்று (திங்கள்கிழமை) முஸாஃபா பகுதியில் ஏற்பட்ட எரிபொருள் டேங்கர் வெடிப்பில் 3 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
உயிரிழந்த மூவரில் இரண்டு இந்தியர்கள், ஒருவர் பாகிஸ்தானியர் என்று அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது. அத்துடன் 6 பேருக்கு லேசானது முதல் மிதமானது வரை காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ADNOC சேமிப்பு தொட்டிகளுக்கு அருகில் உள்ள ICAD 3 இல் ஏற்பட்ட தீ தற்பொழுது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது. இந்த தீ விபத்துடன் சேர்த்து அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் புதிய கட்டுமானப் பகுதியிலுத் திங்கள்கிழமை காலை மற்றொரு சிறிய தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.
இரண்டு தீ விபத்துகளுக்கும் ட்ரோன்கள் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. தீ விபத்து தொடங்குவதற்கு சற்று முன்பு பறக்கும் பொருட்கள் இரண்டு பகுதிகளிலும் விழுந்ததாக அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தீவிபத்துகளுக்கான காரணத்தை அறிய காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.