UAE: சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீவிபத்து..!! வாகனம் முழுவதும் தீக்கிரையாகிய அவலம்..!!
அபுதாபியில் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதனால் அந்த வாகனம் முழுவதும் தீக்கிரையாகி உள்ளது. இந்த சம்பவமானது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அபுதாபியின் கலீதியா பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற பாதுகாப்புக் குழுவினர் தீயினை அணைத்திருக்கின்றனர்.
முதலில் இன்று (புதன்கிழமை) காலை கலீதியா பகுதியில் வாகனம் தீ பிடித்து எரிவதாக சிவில் பாதுகாப்புக் குழுவின் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் வந்துள்ளது.
உடனடியாக, சிவில் பாதுகாப்புக் குழு, தேசிய ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அவர்களின் துரித நடவடிக்கையினால் மிகவும் குறைந்த நேரத்திலேயே தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
இந்த நிகழ்வையடுத்து அபுதாபியில் உள்ள சிவில் பாதுகாப்பு துறை, வாகன உரிமையாளர்களுக்கு தங்கள் வாகனங்களை அவ்வப்போது பராமரிப்பு செய்யுமாறும், பொருள் இழப்பைக் குறைக்க தீயணைப்பான்களை வாகனங்களில் வைத்திருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுபோன்ற விபத்துகள் உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துவதோடு, உயிர் சேதத்தையும் ஏற்படுத்தும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.