அய்ன் துபாய் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிப்பு..!!
உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான ஃபெர்ரி வீலான அய்ன் துபாய் மேம்பாட்டு பணிக்காக இன்று, மார்ச் 14 முதல் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது இன்று தொடங்கி ரமலான் மாதம் இறுதி வரையிலும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது பற்றி இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்களுக்கு அய்ன் துபாயை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் தொடர்ந்து “வரவிருக்கும் வாரங்களில் நிகரற்ற அனுபவத்தை தொடர்ந்து மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, நாங்கள் எங்கள் வாடிக்கையாளர் குழு மற்றும் முக்கிய கூட்டாளர்களுடன் இணைந்து புதிய மற்றும் அற்புதமான சலுகைகளை அறிமுகப்படுத்துவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புளூவாட்டர்ஸ் ஐலேண்டில் அமைந்துள்ள இந்த அய்ன் துபாய் கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.
அய்ன் துபாயின் ஒவ்வொரு கேபினும் பார்வையாளர்களுக்கு துபாயின் 360 டிகிரி காட்சிகளை அரேபிய வளைகுடாவின் கடல்களுக்கு மேல் பார்க்க சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. இது போல் அய்ன் துபாய் மொத்தம் 48 ஆடம்பரமான கேபின்களைஎ் கொண்டுள்ளது. ஒவ்வொன்றிலும் 40 நபர்கள் வரை பயணிக்க முடியும் எனபது குறிப்பிடத்தக்கது.