அபுதாபியில் 10 வினாடிகளில் தகர்க்கப்பட இருக்கும் 144 மாடிகள்..!! மினா சையத் துறைமுகத்தில் உள்ள 4 கட்டிடங்கள் நாளை இடிப்பு..!!
அபுதாபியில் தற்பொழுது பயன்பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்டிருக்கும் மினா பிளாசா டவர்கள் தகர்க்கப்படவிருப்பதாக ஏற்கெனவே அதிகாரிகள் அறிவித்திருந்தனர். அதன்படி அவற்றை இடிக்கும் பணி நாளை (நவம்பர் 27 வெள்ளிக்கிழமை) காலை முதல் பிற்பகல் வரை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிடங்களை தகர்க்கும் போது, அப்பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த மினா போர்ட் பகுதியில் (மினா சையத்) இருக்கும் கடைகள் மற்றும் சந்தைகள் தற்காலிகமாக இன்று (வியாழக்கிழமை)இரவு 7 மணி முதல் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணி வரை மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்காலிகமாக மூடப்படுவது மீன் சந்தை, பழங்கள் மற்றும் காய்கறி சந்தை, கூட்டுறவு சமூகம், கால்நடை சந்தை மற்றும் இறைச்சிக் கூடம் ஆகியவற்றை உள்ளடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மினா சையத் பகுதியில் அமைந்துள்ள கைவிடப்பட்ட முடிக்கப்படாத கட்டிடங்கள் இடிக்கப்படுவதன் மூலம் அப்பகுதியில் குடியிருப்புகள், பிரம்மாண்ட மீன் சந்தை மற்றும் இது போன்ற பல்வேறு கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுற்றுலா மற்றும் வணிக தலமாக மாற்றப்படவிருப்பதாக நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறை (Department of Municipalities and Transport) ஏற்கெனவே கூறியுள்ளது.
மேலும் கட்டிட இடிப்பு பணிகளுக்கு வசதியாக இன்று முதல் சாலைகள் மூடப்பட உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. அபுதாபி காவல்துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகளின் கூற்றுப்படி, போர்ட் சையத் பகுதிக்கு செல்லும் வழிகள் நாளை 6 மணி வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மூடப்படுவது இரு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் மினா பகுதியில் இரவு 10 மணி முதல் நாளை காலை 9 மணி வரை வாகன ஓட்டிகளுக்கு தடை விதிக்கப்படும். இதில் ஷேக் சையத் சுரங்கப்பாதை, மினா தெரு, கார்னிச் தெரு மற்றும் அப்பகுதியில் உள்ள மற்ற வழிகள் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
நாளை (வெள்ளிக்கிழமை) இரண்டாம் கட்டமாக, மினா பகுதியில் சாலைகள் காலை 9 மணி முதல் கட்டிட இடிப்பு பணிகள் முடியும் வரை மூடப்படும். இவற்றில் இரு திசைகளிலும் உள்ள ஷேக் சய்யத் சுரங்கம், ஷேக் கலீஃபா பின் சையத் தெரு மற்றும் ஹம்தான் பின் முகமது ஸ்ட்ரீட் ஆகியவை அடங்கும். கார்னிச் தெருவில் திசை திருப்பப்படுவதற்கும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பாதைகளுக்கு பதிலாக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். தற்காலிகமாக மூடப்பட்ட காலகட்டத்தில் மினா சையத் சந்தைகளில் ஷாப்பிங் செய்ய விரும்பும் குடியிருப்பாளர்கள் நகரத்தின் பிற சந்தைகள் மற்றும் வணிக மையங்களையும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக மினா பிளாசா டவர்ஸை இடிப்பதற்காக DMD-யால் நியமிக்கப்பட்ட மோடான் பிராபர்ட்டீஸ் (Modon Properties), நான்கு பெரிய மற்றும் தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட உயரமான கட்டமைப்புகளை உள்ளடக்கிய மினா பிளாசா டவர்ஸிற்கான விரிவான கட்டமைப்பு பகுப்பாய்வு மற்றும் கணக்கீடுகளைத் தொடர்ந்து, கட்டடங்களை இடிப்பது முழுமையான இடிப்பு என உறுதிப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, மொத்தம் 144 மாடிகள் 10 வினாடிகளில் தகர்க்கப்படும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இடிப்பு பணிகள் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டபடி மேற்கொண்டதாக அபுதாபி காவல்துறை ஏற்கெனவே கூறியுள்ளது. மோடான் பிராபர்ட்டீஸ் நிறுவனத்தின் டெலிவரி இயக்குநர் அகமது அல் ஷேக் அல் ஜாபி (Director of Delivery at Modon) அவர்கள் கூறுகையில், “இந்த கட்டிட இடிப்பானது அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் மற்றும் பொருட்களுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அறிக்கையை எங்கள் வெடிபொருள் நிபுணர்களின் உதவியுடன் உருவாக்கினோம். அதன்படி, மினா சையத் பகுதிக்கு 1,100 மீட்டர் சுற்றியுள்ள பகுதிக்கு சப்தத்தை கட்டுப்படுத்த வேண்டியிருக்கும். இப்பகுதியில் உள்ள மக்கள் கட்டிடம் தகர்க்கப்படும் போது குண்டு வெடிப்பதை போன்ற சப்தத்தை கேட்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மெகா புனரமைப்பு திட்டம்
முடிக்கப்படாத கட்டிடங்களை தகர்த்தெடுப்பது மினா சையத் பகுதியை மறுவடிவமைப்புக்கான மெகா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று DMD தெரிவித்துள்ளது. அமீரக தலைநகரமான அபுதாபியில் பாரம்பரிய சந்தைகளை புத்துயிர் பெறுவதற்கான ஒரு விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக மறுவடிவமைப்பு செய்யப்படும் மினா சயீத் வார்ஃப்பின் (Mina Zayed Wharf), முதன்மை திட்டம் குறித்த விவரங்களை அதிகாரிகள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
மறுவடிவமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, துறைமுகப் பகுதியின் பாரம்பரியம் அப்படியே வைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒன்று, பழைய மீன் சந்தையின் கட்டமைப்பு – மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தலைநகரின் முக்கிய கடல் உணவு மையமாக செயல்பட்டு வரும் இது பாதுகாக்கப்படும். அதன் உட்புறங்கள் புதிய கடைகள் மற்றும் பிற வசதிகளுக்கு இடமளிக்கும் வகையில் மீண்டும் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சூக்குகள் மாற்றப்பட்டு பருவகால சந்தை சேர்க்கப்படும். தற்போதுள்ள ஒரு புதிய மீன் சந்தை, ஒரு பிளான்ட் சூக், ஒரு பழம் மற்றும் காய்கறி சந்தை, இறைச்சி சந்தை போன்ற பல வணிகங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
தற்போதுள்ள வணிகங்கள்
தற்போதுள்ள கடைகள் மற்றும் சந்தைகள் மறுவடிவமைப்பு காலம் முழுவதும் பொதுமக்களுக்கு திறந்திருக்கும். தற்போதைய சந்தைகளில் உள்ள வணிகங்களை பாதிக்காமல், மறு அபிவிருத்தி திட்டங்கள் முடிந்ததும் கடைகள் மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று மில்லியன் சதுர மீட்டருக்கு மேல் பரந்து விரிந்திருக்கும் இந்த திட்டம் தலைநகரில் வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை வளர்ப்பதற்கும், அபுதாபியின் நகர்ப்புற வளர்ச்சியை ஆதரிப்பதற்கும், நாட்டின் உண்மையான அடையாளம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும் அமைக்கப்பட்டுள்ளது.
1972 இல் திறந்து வைக்கப்பட்ட மினா சையத் அபுதாபியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய துறைமுகமாக பணியாற்றி வருகிறது. அபுதாபியின் சர்வதேச வர்த்தகத்தை உயர்த்துவதில் கருவியாகப் பங்கு வகிக்கும் கடல்சார் தொழில்துறையின் பிராந்திய முன்னோடிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.