UAE: ICC T20 போட்டியை காண வரும் குடும்பத்தினர்களுக்காக சமூக இடைவெளியுடன் பிரத்யேக இருப்பிடம்..!! சமூக வலைத்தளத்தில் வைரல்..!!
உலகம் முழுவதையும் அச்சுறுத்திய கொரோனா தொற்றுநோயின் பாதிப்புகள் ஐக்கிய அரபு அமீரகத்திலும் பரவ தொடங்கியதிலிருந்து, அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக அபுதாபி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வந்தது.
கொரோனா பாதிப்புகள் அமீரகத்தில் தற்போது பெருமளவு குறைந்திருந்தாலும், அபுதாபி அரசானது நடந்து வரும் T20 கிரிக்கெட் உலகக்கோப்பையை காண வரும் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் ஆரோக்கியத்தில் எந்த வித சமரசமும் செய்து கொள்ளாமல், அபுதாபியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை குடும்பமாக காண வரும் கிரிக்கெட் பார்வையாளர்களுக்காகவே பிரத்யேகமாக சமூக இடைவெளியுடன் குடும்ப இருப்பிடம் (Family pods) அமைத்திருந்தது தற்போது உலகம் முழுவதிலும் வைரலாகி உள்ளது.
ICC T20 உலகக் கோப்பையின் தொடக்க போட்டியான ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த போட்டியில், பார்வையாளர்கள் சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக சையத் கிரிக்கெட் ஸ்டேடியத்தின் புல் தரை பகுதியில் குடும்ப இருக்கைகளை நிர்வாகத்தினர் அமைத்திருந்ததை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படங்கள் அதிகம் பேரால் பகிரப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியை காணும் இருக்கைகளுடன் கூடிய வசதிகளை கொண்டுள்ளது. இருப்பினும் கிழக்கு மற்றும் மேற்குப் பக்கங்களில் பார்வையாளர்கள் தரையில் அமர்ந்து போட்டியை காணும் வகையில் பச்சை நிற புல்வெளி தரையே உள்ளது. கொரோனா காலத்திற்கு முன்பாக இப்பகுதியில் அமர்ந்து அனைவரும் போட்டியை காண அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடந்து முடிந்த IPL 2021 சீசனில் கூட இப்பகுதியில் அமர்ந்து போட்டியை காண பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
ஆனால் தற்போது அபுதாபியில் நடக்கும் ICC T20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளை குடும்பத்தினர்கள் ஒன்றாக அமர்ந்து ரசிக்கும் வகையில், சமூக இடைவெளியுடன் குறுகிய வேலி கொண்டு அமைக்கப்பட்ட குடும்ப இருக்கைகளாக சையத் கிரிக்கெட் ஸ்டேடியத்தின் நிர்வாகத்தினர்கள் மாற்றி அமைத்துள்ளனர். இந்த வித்தியாசமான இருப்பிடம் போட்டிகளை அனுபவிக்க குடும்பங்களுக்கு அற்புதமான பாதுகாப்பான சூழலை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது,
அமீரகத்தில் தற்போது கிரிக்கெட் போட்டிகளை காண வரும் பார்வையாளர்களின் திறன் 70 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், மைதானத்தில் ஒரு போட்டிக்கு 10,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இருக்க முடியும் எனவும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். போட்டியை காண வரும் ரசிகர்கள் தங்களின் அல் ஹோஸ்ன் அப்ளிகேஷனில் கிரீன் பாஸ் மற்றும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட நெகடிவ் PCR சோதனை முடிவை வைத்திருக்க வேண்டும் என்பதும் கவனிக்கத்தக்கது.