அமீரக சட்டங்கள்

அமீரகத்தில் இனி கத்தி போன்ற கூர்மையான பொருட்களை எடுத்துச் செல்ல தடை… அமலுக்கு வந்த புதிய சட்டம்…!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் அமலுக்கு வந்துள்ள புதிய சட்டத்தின்படி தொழில்முறை வேலைக்குத் தேவைப்பட்டால் ஒழிய, கூர்மையான கருவிகள் மற்றும் கத்திகளை எடுத்துச் செல்வது இப்போது சட்டவிரோதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் தனது சட்டத்தைத் திருத்தி செப்டம்பர் 2021 இல் புதிய விதி 405 ஐ அறிமுகப்படுத்தியது. இது கூர்மையான கருவிகள் மற்றும் கத்திகளை எடுத்துச் செல்வது சட்டவிரோதமானது என்று கூறுகிறது. இந்த விதி இந்த மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் கூறப்பட்டுள்ள கருவிகள் வெட்டுதல், துளைத்தல், நொறுக்குதல் அல்லது குத்துதல் ஆகியவற்றை செய்ய உதவும் கருவிகளை உள்ளடக்கியது. இந்த விதியை மீறும் எவருக்கும் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என சட்டம் கூறுகிறது.

இந்த சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு, ஒரு நபர் கத்திகள், கோடாரிகள் போன்ற கூர்மையான பொருட்களை வைத்திருந்து, அந்த பொருட்கள் ஒருவருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பயன்படுத்தப்படாவிட்டால் அது சட்டத்தை மீறுவதாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

2020 ஆம் ஆண்டில், துபாய் குற்றவியல் நீதிமன்றங்கள் கத்திகள், வாள்கள், உலோகக் கம்பிகள் மற்றும் சுத்தியல்கள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்திய 135 வழக்குகளை விசாரித்ததாக கூறியுள்ளது. தற்பொழுது அமலுக்கு வந்துள்ள இந்த புதிய சட்டம் நாட்டில் தாக்குதல்கள் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளைகள் போன்ற வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க உதவும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

“இதற்கு முன் கூர்மையான ஆயுதங்களை எடுத்துச் செல்வது ஐக்கிய அரபு அமீரக சட்டங்களின்படி சட்டவிரோதமாக கருதப்படாது” என்று துபாயில் உள்ள அல் ரோவாத் வழக்கறிஞர் டாக்டர் ஹசன் எல்ஹாய்ஸ் கூறியுள்ளார். மேலும் கூறுகையில் “ஆனால் தற்பொழுது அமல்படுத்தப்பட்டிருக்கும் தண்டனைச் சட்டத்தின் புதிய விதி இந்தச் செயலை குற்றமாக்கியுள்ளது மற்றும் கார்பென்டர்கள் அல்லது இறைச்சி கடைக்காரர்கள் போன்ற கூர்மையான கருவிகள் தங்கள் தொழில்களுக்குத் தேவைப்படும் நபர்கள் மட்டுமே அத்தகைய பொருட்களை எடுத்துச் செல்வதை அனுமதிக்கின்றது. இது நாட்டின் சட்ட அமைப்பின் இயல்பான முன்னேற்றமாகும், இது அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது மற்றும் குற்றத்தைத் தடுப்பதில் கவனம் செலுத்துகிறது.” என தெரிவித்துள்ளார்.

துபாய் சிவில் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியும், துபாயின் குற்றவியல் நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதியுமான அகமது இப்ராஹிம் சைஃப், புதிய சட்டம் கடுமையான குற்றங்களைத் தடுக்க உதவும் “முன்னெச்சரிக்கை நடவடிக்கை” என்று கூறியுள்ளார். “

அத்துடன் “கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தி உடல் ரீதியான தாக்குதல் சம்பவங்கள் ஏதேனும் நடந்தால், அவர்கள் தாக்கியதற்காக மட்டுமல்லாமல், அந்த ஆயுதத்தை எடுத்துச் சென்றதற்காகவும் அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும்” என்று அவர் கூறியிருக்கிறார்.

மேலும் இவர் துபாய் குற்றவியல் நீதிமன்றங்களில் தனது 10 வருட சேவையின் போது, ​​இளைஞர்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்லும் பல துரதிர்ஷ்டவசமான தாக்குதல்கள் மற்றும் திருட்டு சம்பவங்களை பார்த்ததாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து  “இந்தச் சட்டத்தின் மாற்றம் குற்றத்தைத் தடுப்பதற்கும் மக்களைப் பாதுகாப்பதற்கும் உதவும், மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது மட்டுமல்லாமல், குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் சட்டங்களை இயற்றுவது சட்டமன்ற உறுப்பினரின் பங்கு” என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இப்போது, ​​​​காவல் அதிகாரிகள் ஏதேனும் கூர்மையான கருவியை குடியிருப்பாளர்கள் வைத்திருப்பதைக் கண்டால் அவர்களை நிறுத்தி விசாரிக்க முடியும் என்றும் இது குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்க உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!