UAE: 150 மில்லியனுக்கும் மேலான பூக்களுடன் மீண்டும் திறக்கப்படும் மிராக்கிள் கார்டன்..!! தேதியை வெளியிட்ட நிர்வாக குழு..!!
மில்லியன் கணக்கில் பூக்களை ஒரே இடத்தில் கொண்டிருக்கும் துபாயின் பிரபலமான சுற்றுலா தலமான மிராக்கிள் கார்டன் புத்துணர்வுடன் மீண்டும் திறக்க தயாராகியுள்ளது. இன்னும் சில நாட்களில் தனது 11வது சீசனுக்காக துபாய் மிராக்கிள் கார்டன் மீண்டும் திறக்கப்படும் என தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் திறக்கப்பட்ட மிராக்கிள் கார்டனின் 10வது சீசன் கோடை காலத்தை முன்னிட்டு கடந்த ஜூன் மாதத்தில் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அமீரகத்தில் குளிர் காலநிலை தொடங்க ஆரம்பித்துள்ளதால், மிராக்கிள் கார்டன் மீண்டும் பார்வையாளர்களை வரவேற்க தயாராக உள்ளது. இதனையடுத்து 11வது சீசன், அக்டோபர் 10 திங்கள் அன்று தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கான டிக்கெட்டுகள் விரைவில் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 150 மில்லியனுக்கும் அதிகமான பூக்களைக் கொண்டிருக்கும் இந்த மிகப்பெரிய கார்டன், பார்வையாளர்கள் இயற்கை சார்ந்த சூழலில் நேரத்தை செலவிடுவதற்கும் விதவிதமான பூக்களை கண்டு களிப்பதற்கும் ஏற்புடைய இடமாகும்.
ஒவ்வொரு ஆண்டும், 72,000 சதுர மீட்டர் பரப்பளவுள்ள இந்த இடத்தில் 400-மீட்டர் பாதையும் பார்வையாளர்களை கண்ணுக்கினிய நடைப்பயணத்தை மேற்கொள்ள உதவும் ஒரு அனுபவத்தைக் கொடுக்கும் என கூறப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் A380 விமானத்தின் டிஸ்ப்ளே மற்றும் கார்டனின் டிஸ்னி அவென்யூவில் உள்ள மிக்கி மவுஸின் 18-மீட்டர் மலர் அமைப்பு ஆகியவை பூங்காவில் உள்ள மற்ற குறிப்பிடத்தக்க இடங்கள் அடங்கும். மேலும் இந்த சீசனில் புதிய அற்புதமான அனுபவங்கள் பார்வையாளர்களுக்கு இருப்பதாகவும் மிராக்கிள் கார்டனின் நிர்வாக குழு தெரிவித்துள்ளது.