இந்தியா செல்லும் பயணிகளுக்கு முக்கிய செய்தி..!! “ஏர் சுவிதா” முறையை நீக்கிய அரசு..!!
வெளிநாடுகளில் இருந்து இந்தியா செல்வதற்கு கடந்த ஒரு சில ஆண்டுகளாக ஏர் சுவிதா எனும் புதிய தளத்தில் பதிவு செய்வது கட்டாயமாக இருந்து வருகிறது. கொரோனா காலத்தின் போது ஆரம்பிக்கப்பட்டிருந்த இந்த பதிவு முறையானது தற்பொழுது நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்தியாவிற்கு பயணம் செய்யக்கூடிய பயணிகள் இனிமேல் ஏர் சுவிதாவில் ரிஜிஸ்டர் செய்யத் தேவையில்லை என இந்திய அரசு தற்பொழுது அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 2 ம் தேதி இந்தியாவின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டிருந்த வழிகாட்டுதல்களை திருத்தம் செய்து இந்த புதிய சுற்றறிக்கையை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த தகவல் குறித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரக்கூடிய பயணிகள் ஏர் சுவிதாவில் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற கட்டாயத் தேவையில் இருந்து விலக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த முடிவானது இன்று (நவம்பர் 22) முதல் நடைமுறைக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் இனி இந்தியா செல்லும் பயணிகள் எவ்வித குழப்பமும் இல்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இருப்பினும் இந்தியா செல்பவர்களில் கொரோனாவிற்கான அறிகுறி கொண்டவர்கள் முறையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.