அமீரகத்தில் நிலவும் குறைந்த வெப்பநிலை.. பனிக்கட்டிகளாக மாறிய குளங்கள்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையினால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. பள்ளிகளில் நேரடி வகுப்புகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டன. ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இந்த மூன்று நாட்கள் கனமழைக்குப் பிறகு, இன்றும் அமீரகத்தில் வெப்பநிலை மிகக் குறைந்து இருந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரமான மலையான ஜெபல் ஜெய்ஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 1.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்ததாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. இந்த குறைந்த வெப்பநிலையானது அதிகாலை 4.15 மணிக்கு பதிவானதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மலையில் மிகவும் குளிராக இருந்ததால், அதன் உச்சியில் இருந்த மழைநீர் குளங்கள் உறைந்து காணப்பட்டதாகவும் அங்கு சென்றவர்கள் கூறியுள்ளனர். இது பற்றி அவர்கள் கூறுகையில் மலை உச்சியில் இருக்கும் பல குளங்கள் பனிக்கட்டிகளாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
சமூக ஊடகத்தில் வெளியான ஒரு வீடியோவில், ராஸ் அல் கைமாவின் கடலோர நகரமான கலிலாவில் பனிக்கட்டிகளாக உறைந்திருக்கும் வீடியோவும் காட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து மூன்று நாட்களாக அமீரகத்தில் கனமழை பெய்ததன் காரணமாக அதன் முடிவில், அமீரகத்தில் இருக்கும் ஒரு நிலையமான அல் ஃபகாவில் 118 மிமீ மழை பதிவானதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் ஆண்டுக்கு சராசரியாக 100 மிமீ மழையைப் பதிவு செய்வதைக் கருத்தில் கொண்டு இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்று NCM கணித்து இருந்தாலும், ஓரளவு மேகமூட்டமான சூழல் நிலவும் என்றும் மையம் கூறியுள்ளது. மேலும் ஜனவரி 31 -க்குப் பின் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.