சவூதி-பஹ்ரைன்: கிங் ஃபஹத் காஸ்வே வழியாக செல்லும் பயணிகள் முக்கியமான ஆவணங்கள் வைத்திருப்பது அவசியம்..!! அதிகாரிகள் தகவல்..!!
சவூதி மற்றும் பஹ்ரைனிலிருந்து கிங் ஃபஹத் காஸ்வே வழியாக பயணிக்கும் பயணிகள் தேவையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பாதையானது சவூதி அரேபியாவிற்கும் அண்டை நாடான பஹ்ரைனிற்கும் ஒரு இணைப்பு பாலமாக செயல்படுகிறது.
எனவே இந்த பாலத்தின் வழியாக இரு புறத்தில் இருந்தும் வரும் பயணிகள், பயணத்திற்கு தேவையான ஆவணங்களை முறையாக வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஹ்ரைன் குடிமக்கள் தங்களது அசல் அடையாள அட்டைகளை மூன்று மாதங்களுக்கு குறையாத செல்லுபடியுடன் கொண்டு வர வேண்டும் அல்லது மூன்று மாதங்களுக்கு குறையாத செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்ல வேண்டும் என்று KFCA அறிக்கை தெரிவித்துள்ளது.
அதே போல் பஹ்ரைன் குடிமக்களுடன் வரும் வீட்டுத் தொழிலாளர்கள், சவூதி அரேபியாவிற்குள் நுழையும் போது மருத்துவக் காப்பீட்டுடன், செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதி, செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் எக்ஸிட் அண்ட் ரீஎன்ட்ரி விசாக்கள் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பஹ்ரைன் மற்றும் சவூதி அரேபியா இடையே பயணிக்க விரும்பும் குடியிருப்பாளர்கள் செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதி மற்றும் பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், அதன் காலாவதி ஆறு மாதத்திற்கும் குறைவாக இருக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த பாலத்தை கடக்கும்போது, தனிநபரின் ஆவணங்கள் மட்டுமில்லாமல் அனைத்து பயணிகளும் தாங்கள் பயணிக்கும் வாகனத்தின் ஆவணங்களையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் நினைவூட்டப்பட்டுள்ளது.
இதில் வாகனத்தின் ஓட்டுனருக்கான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம், செல்லுபடியாகும் வாகன உரிமைச் சான்றிதழ் (படிவம்) அல்லது தகுதிவாய்ந்த அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்ட வாகனத்தின் அசல் உரிமையாளரின் அங்கீகாரச் சான்றிதழ் ஆகியவை அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.