அமீரக சாலையில் செயல்படுத்தப்பட்ட புதிய ரேடார்…!! 3 மாதங்களில் 7,000க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்…!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் கடந்த நவம்பர் 2021 இல் செயல்படுத்தப்பட்ட புதிய ரேடார் அமைப்பின் மூலம் மூன்று மாதங்களுக்குள் ராஸ் அல் கைமாவில் உள்ள அதிகாரிகள் காலாவதியான உரிமங்கள் கொண்டிருந்த 7,772 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சாலைகளில் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை அதிகரிக்கவும், சாலை பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை பராமரிக்கவும் ராஸ் அல் கைமாவின் அனைத்து சாலைகளிலும் பொருத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் டிராஃபிக் கேமராக்கள் மூலம் இந்த விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த கேமராக்கள் மூலம் வாகனப் பதிவு மற்றும் கார் இன்சூரன்ஸ் காலாவதியான வாகனங்கள் கண்காணிக்கப்படும் என்று ராஸ் அல் கைமா காவல்துறையினர் முன்னதாக அறிவித்திருந்தனர். இதனை மீறுபவர்களுக்கு 500 திர்ஹம் அபராதம் மற்றும் நான்கு டிராஃபிக் பிளாக் பாயிண்ட்ஸ் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த அபராதமானது மற்ற எமிரேட்ஸில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.