அமீரக செய்திகள்

அபுதாபி: உணவு-பாதுகாப்பு விதிகளை மீறியதால் இரு உணவகங்களை மூட உத்தரவிட்ட அதிகாரிகள்..!!

அபுதாபி நகரில் உணவு-சுகாதார விதிகளை மீறியதற்காக இரண்டு உணவகங்கள் அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளன. அபுதாபி விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையத்தால் (ADAFSA) பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உணவுகள் தயாரிக்கப்பட்டதற்காக அல் தானா உணவகம் (Al Thana Restaurant) மற்றும் Pak உணவகம் மூடப்பட்டுள்ளன.

சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான நிபந்தனைகள் மற்றும் தேவைகளை மீண்டும் மீண்டும் மீறுவதால் இந்த உணவகங்கள் மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADAFSA-வைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த உணவகங்களுக்கு எதிராக மூன்று எச்சரிக்கைகள் மற்றும் மூன்று விதிமீறல்களை வெளியிட்டதாகவும், ஆனால் உணவகங்கள் அதனை சரி செய்யாத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தொடர்ந்து விதிகளை மீறியதன் விளைவாக, உணவகங்கள் மூடுவதற்கு வழிவகை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விதிமீறல்கள் சரி செய்யப்பட்டு, பொதுப் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான அனைத்து உணவுப் பாதுகாப்புத் தேவைகளையும் இந்த உணவகங்கள் பூர்த்தி செய்யும் வரை மூடல் உத்தரவுகள் தொடரும் என்று ஆணையம் உறுதி செய்துள்ளது

உணவு தயாரிக்கும் போது சுகாதாரத்தை பேணாதது, உணவு தயாரிக்கும் போது அழுக்கான உபகரணங்களைப் பயன்படுத்துதல், பூச்சிகள் மற்றும் கொறித்துண்ணிகளை எதிர்த்துப் போராடுவதற்கான பயனுள்ள திட்டங்களைச் செயல்படுத்தத் தவறியது மற்றும் பொதுவாக இடத்தில் தூய்மை இல்லாமை ஆகியவை Pak உணவகத்திற்கான மீறல்களில் அடங்கும்.

அல் தானா உணவகத்தைப் பொறுத்தவரை, ஆய்வாளர்கள் உணவுப் பாதுகாப்பைப் பாதிக்கும் உயர்-ஆபத்து மீறல்களைக் கண்டறிந்தனர். அதில் சமையலறையில் காய்கறி பகுதிக்கு அடுத்ததாக காணப்பட்ட சிறிய பூச்சிகள் உட்பட,  பல உணவுப் பொருட்கள் காலாவதி தேதிகள் இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உணவு-பாதுகாப்புத் தேவைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக அனைத்து உணவு நிறுவனங்களும் ஆணையத்தின் ஆய்வாளர்களால் அவ்வப்போது ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன என்று ADAFSA அறிக்கை தெரிவித்துள்ளது.

அதே போல் உணவகங்களில் ஏதேனும் விதிமீறல்கள் அல்லது உணவுப் பொருட்களின் உள்ளடக்கம் குறித்து சந்தேகம் இருந்தால், அபுதாபி அரசின் கட்டணமில்லா எண்ணான 800555 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்குமாறு குடியிருப்பாளர்களை அதகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் அந்த நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!