துபாய் டூட்டி ஃப்ரீ டிராவில் இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. 1 மில்லியன் டாலர் பரிசு..!!
துபாயில் கடந்த சனிக்கிழமை மார்ச் 2ம் தேதி அன்று துபாய் டூட்டி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஆண்கள் இறுதிப் போட்டியின் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. அதன் பிறகு நடந்த துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லினியர் டிராவில் அபுதாபியில் வசிக்கும் இந்தியர் ஒருவர் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்று அதிர்ஷ்டசாலி ஆகியுள்ளார்.
டென்னிஸ் வீரரும் போட்டியின் சாம்பியனுமான யூகோ ஹம்பர்ட் இந்த வெற்றிக்கான டிக்கெட்டை எடுத்துள்ளார். டென்னிஸ் இறுதிப் போட்டியில் அலெக்சாண்டர் பப்லிக் என்பவரை தோற்கடித்து தனது முதல் துபாய் பட்டத்தை வென்ற அதிர்ஷ்டகாரரின் கையினால் எடுக்கப்பட்ட இந்த டிக்கெட் இந்தியர் ஒருவரையும் அதிர்ஷ்டகாரராக மாற்றியுள்ளது.
கடந்த 39 ஆண்டுகளாக அபுதாபியில் வசித்து வரும் 60 வயதான இந்தியாவைச் சேர்ந்த சுனில் நய்யார் என்பவர், கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதியன்று சீரிஸ் 452 க்கான டிக்கெட்டை ஆன்லைனில் வாங்கியுள்ளார். அதாவது அவர் வாங்கிய 0971 என்ற எண்தான் தற்போது அவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வழங்கியுள்ளது.
அமீரகத்தில் உள்ள காப்பீட்டு நிறுவனத்தில் மூத்த ஆலோசகராக பணிபுரியும் நய்யார், இந்த பரிசுத் தொகையை தற்போது இங்கிலாந்தில் ஏரோஸ்பேஸ் படித்துக் கொண்டிருக்கும் தனது மகனின் படிப்புக்குச் செலவு செய்ய உள்ளதாகவும், பின்னர் தனது ஓய்வுக்கால சேமிப்பிற்காக ஒரு பகுதியை ஒதுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்தியாவின் தலைநகர் டெல்லியைச் சேர்ந்த இவர், முதன்முதலில் 1999 ஆம் ஆண்டு மில்லினியம் மில்லினியம் ப்ரோமோஷன் தொடங்கியதில் இருந்து 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்ற 225வது இந்திய நாட்டவர் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.
சுமார் 15 ஆண்டுகளாக துபாய் டூட்டி ஃப்ரீ டிராவில் பங்கேற்று வருவதாகக் கூறிய நய்யார், துபாய் டூட்டி ஃப்ரீ நிர்வாகத்துக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். துபாய் டூட்டி ஃப்ரீ நடத்தும் இந்த மில்லினியம் மில்லினியர் டிராவில் டிக்கெட் வாங்குபவர்களில் இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel