ஃபேமிலி, டூரிஸ்ட் என்ட்ரி விசாவை மீண்டும் வழங்கவுள்ள கத்தார்..!! தடுப்பூசி போட்டவர்களுக்கு தனிமைப்படுத்தலில் விலக்கு..!!
கத்தார் நாடானது கொரோனா பரவல் காரணமாக இடைநிறுத்தம் செய்திருந்த குடும்ப மற்றும் சுற்றுலா விசாக்களை ஜூலை 12 முதல் மீண்டும் வழங்கத் தொடங்கும் என்று கத்தாரின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த முடிவு அங்கீகரிக்கப்பட்ட பயணக் கொள்கைகளின் கட்டமைப்பிற்குள் இருப்பதாகவும், கொரோனாவிற்கான முன்னேற்றங்கள் தொடர்பாக பொது சுகாதார அமைச்சின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ட்விட்டரில் பகிரப்பட்ட அறிக்கையில், பொது சுகாதார அமைச்சகமானது, கத்தார் அரசு ஒப்புதல் அளித்த தடுப்பூசியினை குறைந்தபட்சம் கத்தார் நுழைவதற்கு 14 நாட்களுக்கு முன்னர் முழுமையாக போட்டுக்கொண்டு பயணிக்கும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு, தனிமைப்படுத்தல் வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், 12 மாதங்களுக்குள் கத்தாரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கும் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
விசிட்டர்களுக்கு, நாட்டிற்குள் நுழைவதற்கு 14 நாட்களுக்கு முன்னர் முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே நாட்டினுள் நுழைய அனுமதிக்கப்படும். மேலும் கடந்த 12 மாதங்களில் கொரோனாவில் இருந்து மீண்டு, ஒரு டோஸ் தடுப்பூசி பெற்ற GCC குடிமக்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அனைத்து பயணிகளும் நாட்டிற்குள் நுழைவதற்கு 72 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட எதிர்மறை PCR சோதனை முடிவை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு Ehteraz அப்ளிகேஷன் மூலம் ஒப்புதலையும் பெற வேண்டும்.
கொரோனா பாதிப்பின் அடிப்படையில் உலக நாடுகளை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்திய பின்னர் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
Issuing of family and tourist entry visas to be restarted on July 12, 2021
within the framework of the approved travel policies to and from the State of Qatar and based on the recommendations of @MOPHQatar regarding the #Covid19 developments. #MoIQatar pic.twitter.com/mSAqIIsBQj— Ministry of Interior (@MOI_QatarEn) July 8, 2021
உலக நாடுகள் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை என வகைப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் தடுப்பூசி போடாத பயணிகள் தாங்கள் பயணிக்கும் நாடுகளைப் பொறுத்து நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.