பொது இடங்களில் எச்சில் துப்பினால் கடுமையான அபராதம்..!! அறிவிப்பை வெளியிட்ட ஓமான்..!!
பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு 20 ஓமானி ரியால்கள் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 4300 ரூபாய்) அபராதம் விதிக்கப்படும் என ஓமானின் மஸ்கட் நகராட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிவிப்பில் பொது இடங்களில் எச்சில் துப்புவது உள்ளூர் சட்டங்களை மீறுவதாகக் கருதப்படும் என்றும், மீறுபவர்களுக்கு 20 ரியால் அபராதம் விதிக்கப்படும் என்றும் நகராட்சி தெரிவித்துள்ளது.
இதுபோன்ற எதிர்மறையான நடைமுறைகள் நகரத்தின் ஒட்டுமொத்த தோற்றம் மற்றும் அழகியலை பாதிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளதோடு, இந்த செயல்முறையானது பொது சுகாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட நபர் எச்சில் துப்பினால் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தவறான இடங்களில் குப்பைகளை போடுபவர்களுக்கு 100 ரியால் அபராதம் விதிக்கப்படும் என்றும், இது மீண்டும் மீண்டும் செய்தால் அபராதம் இரட்டிப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.