அமீரகத்திற்கு ஒன்னுன்னா அத வேடிக்கை பார்க்க முடியாது.. ரஃபேல் ஜெட் விமானங்களை அமீரகத்தில் நிலைநிறுத்தும் பிரான்ஸ்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தொடர் தாக்குதல்களை நடத்திவரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமீரக அரசின் பாதுகாப்பு அமைச்சகம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா துணை நிற்பதாக இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்ததை தொடர்ந்து, தற்போது பிரான்ஸ் நாடும் ஐக்கிய அரபு அமீரக்தின் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துவதில் பங்கேற்க ஒப்புக்கொண்டதாக இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
அமீரகத்தின் மீதான ஹவுதி தாக்குதல்களுக்கு எதிராகவும், அமீரகத்துடன் துணை நிற்கும் விதமாகவும் தனது ரஃபேல் ஜெட் விமானங்களை அமீரகத்தில் நிலைநிறுத்துவது உட்பட இராணுவ ஆதரவை வழங்க இருப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் டிரோன் அல்லது ஏவுகணை தாக்குதல்களைக் கண்டறிந்து இடைமறிக்கும் நோக்கில், அமீரகத்துடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயல்படும் அல் தஃப்ரா விமானத் தளத்தில் இருந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரெஞ்சு ஆயுதப் படை அமைச்சகம் கூறியுள்ளது.
இது குறித்து பிரெஞ்சு ஆயுதப்படை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “ஐக்கிய அரபு அமீரகம் ஜனவரியில் தங்கள் பிராந்தியத்தில் கடுமையான தாக்குதல்களால் பாதிக்கப்பட்டது. இந்த நட்பு நாட்டிற்கு நமது ஒற்றுமையைக் காட்டுவதற்காக, குறிப்பாக எந்தவொரு ஊடுருவலுக்கும் எதிராக வான்வெளியை பாதுகாக்க, பிரான்ஸ் இராணுவ ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று அமெரிக்காவும் அமீரகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய அதன் USS கோல் என்று அழைக்கப்படும் ஏவுகணை அழிப்பான் போர்கப்பலையும் மற்றும் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களையும் அனுப்பவுள்ளதாக இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தது.
மேலும் தாக்குதல் தெடர்பாக முன்கூட்டிய எச்சரிக்கையை தொடர்ந்து வழங்குவது மற்றும் வான் பாதுகாப்பில் அமீரக பாதுகாப்பு படையினருடன் ஒத்துழைப்பது போன்றவற்றிலும் அமெரிக்கா அதன் பங்களிப்பை வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.