அமீரகத்தில் அடுத்ததாக ஷார்ஜாவிலும் கட்டண டோல் கேட்டா…?? அதிகாரி விளக்கம்..!!
அமீரகத்தில் துபாய், அபுதாபி ஆகிய பகுதிகளில் டோல் கேட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் ஷார்ஜாவில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவது குறித்த செய்திக்கு ஷார்ஜாவில் உள்ள அதிகாரிகள் இதனை மறுத்துள்ளனர்.
ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (SRTA) மூத்த அதிகாரி முகமது அல் ஜாபி, ஷார்ஜாவின் முக்கிய சாலைகளில் டோல் கேட் அமைக்கப்படுவது குறித்த செய்திகளை மறுத்துள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில் சில சுற்றுலாப் பகுதிகளுக்கு மட்டும் நுழைவுக் கட்டணம் வசூலிக்க டோல் பயன்படுத்தப்படலாம் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் ஷார்ஜாவின் சில சாலைகளில் டிரக்குகளுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இதனை தவிர்த்து வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஷார்ஜா நிர்வாகக் குழுவானது போக்குவரத்துக் கட்டணங்கள் தொடர்பான தீர்மானத்தை புதன்கிழமை வெளியிட்டது. இந்த தீர்மானம் “போக்குவரத்து கட்டணங்கள், கட்டுப்பாடுகள், கடமைகள் மற்றும் அவற்றின் மீறல்கள் தொடர்பான அட்டவணைகளை ஒழுங்குபடுத்தும் சட்ட விதிகளின் தொகுப்பை உள்ளடக்கியது. இதில் கட்டணங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு அமீரகத்தில், அபுதாபி மற்றும் துபாய் ஆகிய இரண்டு எமிரேட்களில் டோல் கேட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அபுதாபியில் நகரத்திற்கு செல்லும் கலீஃபா பிரிட்ஜ், முசாஃபா பிரிட்ஜ், ஷேக் சையத் பிரிட்ஜ், மக்தா பிரிட்ஜ் ஆகிய பாலங்களில் டோல் கேட் அமைக்கப்பட்டுள்ளது.
பீக் ஹவர்ஸின் போது இதன் வழியாக செல்லும் ஒவ்வொரு வாகனத்திற்கும் 4 திர்ஹம் கட்டணம் விதிக்கப்படுகிறது. துபாயில், சாலிக் டோல் கேட்டின் கீழ் செல்லும்போது, டாக்சிகள் உட்பட அனைத்து வாகனங்களும் 4 திர்ஹம்ஸ் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.