3.5 மில்லியனை தாண்டும் துபாயின் மக்கள்தொகை.. பகலில் மட்டும் கணிசமாக அதிகரிப்பதாக தகவல்..!!
வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கு மிகவும் பிடித்த நகரங்களில் ஒன்றான துபாயின் மக்கள்தொகையானது 2022 ஆம் ஆண்டின் இறுதியில் 3.55 மில்லியனைத் தாண்டியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள புள்ளியியல் மையத்தின் தரவுகள் துபாய் எமிரேட்டின் மக்கள்தொகை 3,550,400-ஐ எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 2022ம் ஆண்டில் மக்கள் தொகை 2.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. 2021 ஆம் ஆண்டின் இறுதியில் மக்கள் தொகை 3,478,300 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2020 இல் கொரோனா தொற்று நோய் பரவ ஆரம்பித்ததைத் தொடர்ந்து, பொருளாதார நடவடிக்கைகளின் மந்தநிலை மற்றும் நிறுவனங்களின் வேலை நீக்கத்திற்கு மத்தியில் துபாயின் மக்கள் தொகை குறைந்ததாகவும் பின்னர் கடந்த ஆண்டு ஏப்ரலின் போது துபாயின் மக்கள் தொகை 3.5 மில்லியன் மக்கள் தொகையை கடந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
துபாயில் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பொருளாதார மீட்சி மற்றும் பயணம் மற்றும் சுற்றுலா, விருந்தோம்பல், ரியல் எஸ்டேட், விமானப் போக்குவரத்து மற்றும் MICE (கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) போன்ற பல்வேறு துறைகளில் வேலை உருவாக்கம் ஆகியவற்றின் காரணமாக மக்கள் தொகை சீராக அதிகரித்தது என தகவல் கூறப்பட்டுள்ளது.
துபாய் புள்ளியியல் மையத்தின் தரவுகளின்படி, 2020க்குப் பிறகு எமிரேட்டின் மக்கள்தொகை நான்கு சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக, அமீரகத்தின் மற்ற எமிரேட்களில் வசிக்கும் தொழிலாளர்கள் மற்றும் மக்கள் வணிகம் மற்றும் சுற்றுலாவுக்காக துபாய்க்கு வருகை தரும் போது, துபாயின் மக்கள்தொகை பகல் நேரங்களில் மட்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அதிகமாக உயர்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மக்கள்தொகை அதிகரிப்பு மற்றும் அதிகரித்த பொருளாதார நடவடிக்கை காரணமாக, துபாயின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2022 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 4.6 சதவீதம் அதிகரித்து 307.5 பில்லியன் திர்ஹம்ஸாக உயர்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.