அபுதாபி பிக் டிக்கெட் டிராவில் 3 இலட்சம் திர்ஹம்ஸை வென்ற இந்தியர்..!!
அபுதாபியில் பிக் டிக்கெட் நடத்திய வாராந்திர மின்னணு டிராவில் கத்தாரில் வசிக்கும் இந்தியர் 300,000 திர்ஹம் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்த ஷம்சீர் புரக்கல், 2017 இல் அபுதாபியில் பணிபுரிந்தபோது பிக் டிக்கெட் வாங்கத் தொடங்கியுள்ளார். கத்தார் சென்ற பிறகும் பிக் டிக்கெட் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கும் 30 வயதான அவருக்கு, 2022 ஆம் ஆண்டு அதிர்ஷ்டமான ஆண்டாக அமைந்துள்ளது.
இது பற்றி அவர் கூறுகையில், “என்ன சொல்வது என்று தெரியவில்லை. என் உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை. இந்த வருடம் எனக்கும் என் மனைவிக்கும் மிகவும் அதிர்ஷ்டமானதாக அமைந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு எனது மனைவி கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தோம். தற்பொழுது நான் பிக் டிக்கெட்டில் வெற்றி பெற்றுள்ளேன் ”என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இவர், கடந்த 3 ஆண்டுகளாக கத்தாரில் வசித்து வருகிறார். மேலும் இவர் கூறுகையில், “இந்தப் பணத்தில் எனது பங்கைக் கொண்டு, எனது MBA படிப்பைத் தொடர லண்டனுக்குச் செல்ல முடியும். இது என் பல ஆண்டு கனவு” என தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 3 அன்று நடக்கும் பிக் டிக்கெட்டின் நேரலை டிராவின் போது முதலாவதாக வெற்றி பெறும் நபருக்கு 15 மில்லியன் திர்ஹம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.