சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கான பொது மன்னிப்பை மேலும் நீட்டித்த குவைத்..!!
குவைத் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை காலமானது வியாழக்கிழமை (ஏப்ரல் 15) முடியவிருந்த நிலையில், தற்பொழுது குவைத் அதிகாரிகள் கூடுதல் மாத கால அவகாசம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் தமர் அல் அலி வியாழக்கிழமை இந்த சலுகை காலம் ஏப்ரல் 15 முதல் மே மாதம் 15 வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தற்பொழுது வழங்கப்பட்டிருக்கும் இந்த கால அவகாசத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் நிலையை மறுசீரமைக்க விண்ணப்பிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அவ்வாறு செய்யத் தவறியவர்களுக்கு ரெஸிடென்ட் பெர்மிட் மறுப்பு, நாடு கடத்தப்படுதல் மற்றும் மீண்டும் குவைத் நுழைய தடை உள்ளிட்ட தண்டனைகளுக்குப் பொறுப்பாவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய நீட்டிப்பு சட்டவிரோதமானவர்களுக்கு அவர்களின் நிலையை சட்டப்பூர்வமாக்குவதற்கு அதிக நேரம் அனுமதிப்பதையும், இந்த சலுகை காலம் முடிந்ததும் உள்துறை அமைச்சகம் விதிக்கும் தண்டனைகளில் இருந்து தவிர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது குவைத்தில் வசிக்கும் சட்ட விரோத குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை. கடந்த ஆண்டு, குவைத்தில் சுமார் 100,000 சட்ட விரோத குடியிருப்பாளர்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டது.
குவைத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் முதல் முறையாக சட்ட விரோத குடியிருப்பாளர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு பின்னர் பல முறை நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.