ஓமானில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 17% ஆகக் குறைவு..!!
ஓமானில் பணிபுரியும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையானது அக்டோபர் இறுதிக்குள் 17 சதவீதம் குறைந்துள்ளதாக தேசிய புள்ளிவிவர மற்றும் தகவல் மையம் (NCSI) தெரிவித்துள்ளது.
NCSI-ன் அறிக்கை படி, நாட்டின் மொத்த வெளிநாட்டு தொழிலாளர்கள் கடந்த ஆண்டு 1,712,798 ஆக இருந்த நிலையில் 1,435,070 ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாத இறுதி வரை 1,138,478 வெளிநாட்டவர்கள் தனியார் துறையில் பணிபுரிந்து வருவதாக NCSI-யின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு அரசுத் துறைகளில் 42,895 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இருந்ததாகவும், 253,697 பேர் குடும்ப மற்றும் சார்புத் துறையில் இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், நவம்பர் 15 ஆம் தேதி ஓமானில் இருந்து வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு செல்ல விரும்பி ஆன்லைனில் பதிவு செய்ய தொடங்கியதிலிருந்து, அபராதம் அல்லது கட்டணம் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேற விரும்பும் வெளிநாட்டவர்களிடமிருந்து தொழிலாளர் அமைச்சகம் 7,689 கோரிக்கைகளைப் பெற்றுள்ளது.
அதில், மொத்தம் 3,263 வெளிநாட்டவர்கள் ஏற்கனவே வேலையை விட்டு வெளியேறிவிட்டனர் என்றும், 408 பேருக்கு பணி அனுமதி இல்லை என்றும் அவர்களில் 253 பேர் தங்கள் பணி அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் இத்திட்டம் நூற்றுக்கணக்கான ஆவணமற்ற தொழிலாளர்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.