வெளிநாடுகளில் இருந்து இந்தியா செல்பவர்கள் கவனத்திற்கு.. குழந்தைகள் உட்பட அனைத்து பயணிகளுக்கும் PCR சோதனை கட்டாயம்..!!
இந்தியாவில் சர்வதேச பயணிகளுக்கான நிலையான இயக்க நடைமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு புதிய விதிமுறைகளை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். புதிய வகை கொரோனா வைரஸ் பரவலுக்கான தடுப்பு நடவடிக்கைகளாக சர்வதேச பயணிகளுக்கான நடைமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு புதிய நடைமுறைகள் இன்று (பிப்ரவரி 22) முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நெறிமுறைகளின்படி, அனைத்து வயது குழந்தைகள் உட்பட இந்தியாவுக்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளுக்கும், பயணத்திற்கு முன் PCR சோதனைகள் மேற்கொள்வது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்தியில், “வயது மற்றும் பாலினத்தைப் பொருட்படுத்தாமல் குழந்தைகள் உட்பட அனைத்து பயணிகளுக்கும் PCR சோதனை கட்டாயமாகும். தங்களின் குடும்ப உறுப்பினர் இறந்தால் அதற்காக இந்தியாவுக்கு பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே எதிர்மறையான PCR சோதனை முடிவுக்கான விதிமுறையை இருந்து விலக்கு அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
இருப்பினும், அவர்கள் போர்டிங் செய்வதற்கு குறைந்தது 72 மணி நேரத்திற்கு முன்னதாக ஏர் சுவிதா போர்ட்டலில் விண்ணப்பித்து ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டும். இதில் வரும் முடிவே இறுதியானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏர் சுவிதா போர்ட்டலில் RT – PCR சோதனைக்கான எதிர்மறை சான்றிதழ்களைப் பதிவேற்றிய அனைத்து பயணிகளும் விமான நிலையத்தை விட்டு வெளியேறவோ அல்லது ட்ரான்சிட் விமானங்களில் பயணிக்கவோ அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அவர்கள் 14 நாட்களுக்கு அவர்களின் உடல்நிலையை சுய கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். இருப்பினும், இங்கிலாந்து, ஐரோப்பா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளுக்கு தனி நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வரும் அல்லது அமீரகம் வழியாக இந்தியாவிற்கு பயணிப்பவர்களில் PCR சோதனைக்கான எதிர்மறை சான்றிதழ்களைப் பெற்ற பயணிகள், 14 நாட்களுக்கு தங்கள் உடல்நிலையை சுயமாக கண்காணிக்க அறிவுறுத்தப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கு செல்லும் சர்வதேச பயணிகளுக்கான புதிய நெறிமுறைகள் குறித்த முழு விளக்கம்..!!