இனி வேலை செய்ய வயது தடையில்லை… 60 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டினரும் பணிபுரிய ஓமான் அனுமதி…!!
ஓமானில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டினர் இனி தங்கள் பணி அனுமதியை புதுப்பித்து தனியார் துறையில் வேலை தேட முடியும் என தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஓமானில் வெளிநாட்டவர் பணிபுரிவதற்கான வயது வரம்பாக 60 நிர்ணயிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள நிலையில் இதனை ரத்து செய்ய முற்படும் வகையில் தொழிலாளர் அமைச்சகம் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஓமானின் தொழிலாளர் துறை அமைச்சர், தனியார் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் வயது வரம்பான 60 வயதை ரத்து செய்ய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் “தனியார் துறையின் தற்போதைய நிலை மற்றும் ஏராளமான கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, 60 வயதிற்கு மேற்பட்ட வெளிநாட்டினரின் மனிதவளத்தைக் கொண்டுவருவதற்காக அவர்களின் உரிமங்களைப் புதுப்பித்து, தனியார் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான 60 வயது வரம்பை ரத்து செய்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.