UAE: இனி தடுப்பூசி, PCR முடிவு அறிக்கையை கையில் எடுத்துச் செல்ல தேவையில்லை..!! எமிரேட்ஸ் ஐடி ஒன்றே போதும்..!! துபாய் ஏர்போர்ட்டில் புதிய நடைமுறை..!!
இனி துபாயிலிருந்து வெளிநாடு செல்லும் பயணிகள் தங்களது எமிரேட்ஸ் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி தங்களது தடுப்பூசி மற்றும் PCR நிலையைக் காட்டலாம் என்று எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
எமிரேட்ஸ் விமான சேவைக்கும் துபாய் சுகாதார ஆணையத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு துபாய் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற Arab Health 2021-இன் முதல் நாளில் அறிவிக்கப்பட்டது.
துபாயின் காகிதமற்ற மூலோபாயத்திற்கு ஏற்ப, எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் ஊழியர்கள், துபாய் விமான நிலையத்தில் உள்ள விமானத்தின் செக்-இன் கவுண்டர்களில் தங்கள் எமிரேட்ஸ் ஐடியை ஸ்கேன் செய்வதன் மூலம் பயணிகளின் கொரோனா தடுப்பூசி மற்றும் PCR நிலையை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை விளக்கியுள்ளனர்.
அதில் எமிரேட்ஸ் விமான முகவரான ஓல்ஹா சோலோட் கூறுகையில், “பயணிகள் செக்-இன் கவுண்டருக்கு வரும்போது, அவர்கள் எமிரேட்ஸ் ஐடியை ஸ்கேன் செய்யும்படி கேட்கப்படுவார்கள். மேலும் தடுப்பூசியின் இரண்டு டோஸினையும் எடுத்து முழுவதுமாக போட்டிருந்தால் அது எங்கள் ஸ்க்ரீன்களில் காண்பிக்கப்படும். அத்துடன் அவர்களின் PCR சோதனை முடிவு செல்லுபடி குறித்தும் காண்பிக்கப்படும். இது அவர்களின் தடுப்பூசி அட்டைகள் அல்லது PCR முடிவு அறிக்கைகளை கையில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை நீக்கிவிடும் மற்றும் இது செக்-இன் செயல்முறையை விரைவாகவும் எளிதாகவும் செய்ய வழிவகுக்கும்” என்று கூறியுள்ளார்.
எமிரேட்ஸ் ஐடி ஸ்கேன் செய்யப்பட்டவுடன், பயணி எடுத்த தடுப்பூசியின் பெயர், இரண்டாவது டோஸ் வழங்கப்பட்ட தேதி மற்றும் பயணி தனது தடுப்பூசி பெற்ற இடம் ஆகியவற்றை இது வெளிப்படுத்துகிறது.
எமிரேட்ஸ் ஐடி ஸ்கேன் செய்யும் இந்த முறையானது கட்டாயமில்லை மற்றும் இது பயணிகளுக்கு செக்-இன் கவுண்டர்கள் வழியாக எளிதில் செயல்முறையை முடிக்க உதவும் ஒரு ‘ஸ்மார்ட்’ விருப்பமாகும். இது பயணிகளின் நேரத்தையும் ஊழியர்களின் முயற்சியையும் மிச்சப்படுத்துகிறது. இல்லையெனில் ஊழியர்கள் பயணிகளுக்கு தடுப்பூசி அட்டைகளைப் பார்த்து அவற்றை சரிபார்க்க வேண்டியிருக்கும் என கூறப்பட்டுள்ளது.
தற்போது வரை, ஃபைசர், சினோபார்ம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகிய மூன்று DHA-அங்கீகரித்த தடுப்பூசிகளை மட்டுமே விமான நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓல்ஹா சோலோட் மேலும் கூறுகையில் “எமிரேட்ஸ் ஐடி இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு, நாங்கள் அவர்களின் பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்வோம். அவர்களின் தடுப்பூசி துபாய் சுகாதார ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டதாக இருந்தால், அது கணிணியில் பிரதிபலிக்கும். இல்லையென்றால், அவர்கள் தங்கள் தடுப்பூசி அட்டை அல்லது அவர்கள் அட்டையின் ஆன்லைன் லிங்கை வழங்க வேண்டும். அவர்களின் PCR சோதனை முடிவை பாஸ்போர்ட் ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ளலாம்” என்றும் அவர் விளக்கியுள்ளார்.
பயணிகளின் எமிரேட்ஸ் ஐடியை ஸ்கேன் செய்தாலும், தனியுரிமை மீறப்படாது என்று ஊழியர்கள் உறுதியளித்துள்ளனர். இந்த முறையில் விமான நிறுவனம் தடுப்பூசி விவரங்களை மட்டுமே பயன்படுத்தும் மற்றும் பயணிகளின் அனைத்து தனிப்பட்ட விவரங்களும் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எமிரேட்ஸ் ஊழியர்கள் அனைத்து பயணிகளையும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (IATA) டிஜிட்டல் டிராவல் பாஸைப் பதிவிறக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளனர். இது ஒரு மொபைல் அப்ளிபேஷன் ஆகும். இது பயணிகளுக்கு அவர்களின் சோதனை மற்றும் தடுப்பூசி வரலாற்றின் சான்றுகளை வழங்க டிஜிட்டல் பாஸ்போர்ட்டை உருவாக்க உதவுகிறது.
பயணி தனது ஆவணங்களை IATA அப்ளிகேஷனில் பதிவேற்றியவுடன் இது கோவிட் -19 கட்டுப்பாடுகள், அவர்கள் பயணிக்கவிருக்கும் நாட்டின் தனிமைப்படுத்தப்பட்ட விதிகள், சோதனைகள், தடுப்பூசிகள் மற்றும் பயணத்திற்கு முன்னர் அவர்களுக்குத் தேவையான பிற நடவடிக்கைகள் மற்றும் அவை எங்கு சோதிக்கப்படலாம் என்பது பற்றிய துல்லியமான தகவல்களைப் பெற அனுமதிக்கும். ஆனால் இந்த அப்ளிகேஷன் தற்போது ஐபோன்களில் மட்டுமே இயங்குகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.