இந்தியா, ஓமான் இடையேயான ஏர் பபுள் ஒப்பந்தம் ஜனவரி 31 வரை நீட்டிப்பு..!! இந்திய தூதரக அதிகாரி தகவல்..!!
கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு தற்பொழுது வரை சிறப்பு விமான சேவைகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், குறிப்பிட்ட நாடுகளுடன் ஏர் பபுள் ஒப்பந்தத்தின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பு விமான சேவைகள் இயங்கி வருகின்றன.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல், இந்தியாவிற்கும் ஓமானுக்கும் இடையே ஏர் பபுள் ஒப்பந்தம் போடப்பட்டு இரு நாட்டு விமான நிறுவனங்களும் சிறப்பு விமான சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஓமானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஏர் பபுள் ஒப்பந்தம் இந்த மாத இறுதி வரை தொடரும் என்று ஓமானில் உள்ள இந்திய தூதரகத்தின் செயலாளர் அனுஜ் ஸ்வரூப் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) வரும் ஜனவரி 31 ம் தேதி வரை சர்வதேச விமான போக்குவரத்துத் தடையை நீடிப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இருப்பினும், சிறப்பு விமானங்கள் மற்றும் சரக்கு விமான சேவைகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது என்றும் DGCA கூறியுள்ளது. இதனால், ஏர் பபுள் ஒப்பந்தம் மற்றும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயங்கும் விமானங்கள் திட்டமிட்டபடி தொடந்து சேவை புரியும் என்று அனுஜ் தற்பொழுது தெரிவித்தார்.
இண்டிகோ, கோ ஏர் மற்றும் ஸ்பைஸ் ஜெட் போன்ற விமான நிறுவனங்கள் இந்தியாவிற்கும் ஓமானுக்கும் இடையில் விமானங்களை பொதுவாக இயக்கி வருவது என்றாலும், ஏர் பபுள் ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளின் தேசிய விமான நிறுவனங்கள் மட்டுமே தற்பொழுது விமானங்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஓமானைச் சேர்ந்த விமான நிறுவனங்களான ஓமான் ஏர் மற்றும் சலாம் ஏர், மற்றும் இந்தியாவை சேர்ந்த விமான நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை மட்டுமே தற்போது ஓமானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.