வளைகுடா நாடுகளில் இருந்து இலங்கை பயணிக்க தடை.. அமீரகம் விதித்த பயணத்தடையும் நீட்டிப்பு..!!
வளைகுடா நாடுகளில் இருந்து இலங்கை செல்லும் பயணிகளுக்கு இலங்கை அரசானது தற்காலிக தடை அறிவித்துள்ளது.
இந்த தடையானது இலங்கை நேரப்படி ஜூலை 1 ஆம் தேதி அதிகாலை 12.01 மணி முதல் நடைமுறைக்கு வந்து இலங்கை நேரமான ஜூலை 13 ம் தேதி இரவு 11.59 மணி வரை என இரு வாரங்களுக்கு இந்த தடை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில், இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் கூறியதாவது: “கோவிட் -19 தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் (NOCPCO) பணிக்குழுவிலிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமான், கத்தார், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு கடந்த 14 நாட்களில் பயண வரலாற்றைக் கொண்ட பயணிகள் இலங்கைக்கு வந்திறங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று சிவில் ஏவியேஷன் இயக்குநர் ஜெனரல் கேப்டன் தெமியா அபேவிக்ரமா அனைத்து விமான நிறுவனங்களுக்கும் தெரிவித்துள்ளார்.
மேற்கூறிய நாடுகள் வழியாக டிரான்ஸிட் விமானங்களில் பயணிக்கும் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளுக்கு இலங்கை தடை விதித்திருக்கும் வேளையில் ஏற்கெனவே ஒரு சில வளைகுடா நாடுகள் இலங்கையில் இருந்து தங்கள் நாட்டிற்குப் பயணிக்கவும் தடை விதித்திருக்கின்றது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகமானது செவ்வாய்க்கிழமை இந்த பயணத்தடையை ஜூலை 21 வரை நீட்டிப்பதாக அறிவித்தது.
இந்த பயணத்தடையின் காரணமாக ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் தங்களின் சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமலும் இலங்கையில் இருந்து திரும்ப முடியாமலும் சிக்கித் தவித்து வருகின்றனர்.