சவூதி அரேபியாவில் 300 ஆண்டு பழமையான மசூதி வழிபாட்டிற்காக மீண்டும் திறப்பு..!!
சவூதி அரேபியாவில் வரலாற்று மசூதிகளைப் பாதுகாக்கும் இளவரசர் முஹம்மது பின் சல்மானின் திட்டத்தின் ஒரு பகுதியாக, 300 ஆண்டுகள் பழமையான மசூதி புதுப்பிக்கப்பட்டு தற்பொழுது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சவூதி பத்திரிகை நிறுவனம் தெரிவிக்கையில், “வழிபாட்டாளர்கள் பிரார்த்தனை செய்வதற்காக நாட்டின் கிழக்கு மாகாணத்தின் அல் அஹ்சா கவர்னரேட்டில் உள்ள ஷேக் அபுபக்கர் மசூதிக்கு வந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
அல் அஹ்ஸாவின் (al ahsa) அல் ஹோஃபுப்பில் (al hofuf) உள்ள பழைய அல் குட் (old Al Kut) சுற்றுப்புறத்தில் உள்ள பழமையான பாரம்பரிய கட்டிடங்களில் இந்த மசூதி ஒன்றாகும். ஒரு தனித்துவமான கட்டடக்கலை பாணியில் அதன் கட்டுமானத்தால் வேறுபடுகின்ற இந்த மசூதி மண், கூழாங்கற்கள் மற்றும் பனை மரங்களால் கட்டப்பட்டது.
இந்த மசூதியின் புனரமைப்புக்கு முன்னர், மசூதியின் பரப்பளவு சுமார் 565 சதுர மீட்டர் இருந்துள்ளது. அதில் சுமார் 125 வழிபாட்டாளர்கள் வழிபட முடியும். இப்போது, புதுப்பிக்கப்பட்ட பின்னர், 166 வழிபாட்டாளர்கள் வழிபட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய காலத்தில் இந்த இடமானது வளைகுடா நாடுகள், இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு இஸ்லாமிய மத போதனைகளை வழங்கக்கூடிய ஒரு முக்கிய இடமாக கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.