துபாயை விட இரண்டு மடங்கு அதிகமாக ஹோட்டல் அறைகளைத் திறக்கும் சவுதி அரேபியா!! – விருந்தோம்பல் துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அறிக்கை….
சவூதி அரேபியாவானது இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 315,000 புதிய ஹோட்டல் அறைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக சொத்து ஆலோசனை நிறுவனமான நைட் ஃபிராங்க் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதாவது 140,000 ஹோட்டல் அறைகளைக் கொண்ட துபாயை விட சவூதியில் உள்ள ஹோட்டல் அறைகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
சவூதி அரேபியாவின் விஷன் 2030 திட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாக விருந்தோம்பல் துறையின் வளர்ச்சி கருதப்படுகிறது. எனவே, 2030 ஆம் ஆண்டுக்குள் சவூதியில் புதிய ஹோட்டல் அறைகளின் எண்ணிக்கை நம்பமுடியாத அளவில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய கிழக்கு ஆராய்ச்சியின் தலைவர் பைசல் துரானி வெளியிட்டுள்ள அறிக்கையில், சவூதியில் மொத்தம் 450,000 ஹோட்டல் அறைகள் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் திட்டத்தின் முக்கிய பகுதியாக உள்நாட்டு சுற்றுலா இருக்கும் என்று அவர் விளக்கியுள்ளார்.
நைட் ஃபிராங்கின் கூற்றுப்படி, சவூதியில் 65 சதவீதம் பேர் ஒரு மாதத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை நாட்டிற்குள் பயணம் செய்கின்றனர். அதிலும் சவுதியின் மக்கள் தொகையில் 56 சதவிகிதத்தினர் 35 வயதிற்குட்பட்டவர்களாக இருப்பதால், பல்வேறு தங்குமிட வசதிகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கும்.
எனவே, இவற்றை கவனத்தில் கொண்டு, முக்கியத்துவம் வாய்ந்த இந்த விருந்தோம்பல் துறையை பூர்த்தி செய்ய, நாம் பரந்த அளவில் சிந்திக்க வேண்டும் மற்றும் ஆடம்பர கிளாம்பிங் தளங்கள் மற்றும் இளைஞர் விடுதிகள் போன்றவற்றை இணைக்க வேண்டும் என்று நைட் ஃபிராங்கில் சவுதி அரேபியாவிற்கான விருந்தோம்பல் தலைவர் துராப் சலீம் தெரிவித்துள்ளார்.