ஓமான்: NOC நீக்கம்.. விசா இல்லாமல் வருகை புரிய அனுமதி.. விரைவில் வரவிருக்கும் புதிய நடைமுறைகள்..!!
ஓமான் நாட்டில் வெளிநாட்டவர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தை மாற்றுவதற்கு தற்பொழுது வரை நடைமுறையில் இருக்கும் NOC எனும் “நோ அப்ஜெக்ஷன் சான்றிதழ்” முறையை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அகற்றுவதற்கான ஓமானின் திட்டங்கள் நாட்டின் தொழிலாளர் கொள்கையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக இருக்கும் என்று ஓமானின் வெளியுறவு துறை அமைச்சர் சையித் பத்ர் அல் புசைடி அவர்கள் தெரிவித்துள்ளார்.
பஹ்ரைனில் நடந்த 16 வது IISS மனாமா உரையாடலில் பேசிய சையித் பத்ர், நீண்ட காலமாக இருக்கும் NOC கொள்கையை நீக்குவது ஓமானின் 2040 விஷன் திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என்று அவர் கூறியுள்ளார். தொழிலாளர் கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியானது, அடுத்த சில வாரங்களில் NOC முறையை ஒழிப்பதும் அடங்கும்,” என்று அவர் கூறினார்.
அதே போல் 100 க்கும் மேற்பட்ட நாடுகளின் குடிமக்களுக்கு விசா இல்லாமல் நாட்டில் நுழைவதற்கான ஒப்புதல் வழங்குவதற்கான நாட்டின் திட்டங்களையும் சையித் பத்ர் அவர்கள் தெரிவித்தார். அவர் இது குறித்து கூறுகையில், “100 க்கும் மேற்பட்ட நாடுகளின் குடிமக்களுக்கு விசா இல்லாத வருகையை 30 நாட்களுக்கு நீட்டிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம், இது எங்கள் பயண மற்றும் சுற்றுலாத் துறையை உயர்த்தும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், 2021 ஜனவரி 1 ஆம் தேதி NOC-யை நீக்குவதாக ஓமான் அரசு ஏற்கெனவே கூறி இருந்தது. இதன் மூலம் நாட்டில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் ஒரு நிறுவனத்திடம் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு எளிதில் வேலை மாறிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அமலுக்கு வரவிருக்கின்ற இந்த புதிய விதியானது, ஒப்பந்தங்களை முடித்த வெளிநாட்டு தொழிலாளர்கள், அவர்கள் ஓமானில் இருந்தாலும் அல்லது நாட்டிற்கு வெளியே இருந்தாலும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.