ஓமான் தேசிய தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு..!!
ஓமானில் வரவிருக்கும் 50-வது தேசிய தினத்தை முன்னிட்டு ஓமான் அரசானது பொது விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது. ஓமான் நாட்டின் தொழிலாளர் அமைச்சர் டாக்டர் மஹத் பின் சையத் பின் அலி பாஓவைன் அவர்கள் 50 வது தேசிய தினத்திற்கு விடுமுறை அளிப்பது குறித்து ஒரு அறிக்கையை பின்வருமாறு வெளியிட்டுள்ளார்.
“ஓமானின் 50-வது புகழ்பெற்ற தேசிய தினத்தை முன்னிட்டு, ஓமான் சுல்தான் மாண்புமிகு ஹைதம் பின் தாரிக் அவர்களின் உத்தரவின் பேரில், வரும் நவம்பர் 25 (புதன்கிழமை) மற்றும் 26 (வியாழக்கிழமை), பொதுத்துறை, பிற சட்ட நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், ஓமான் நாட்டில் இருக்கும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு புதன், வியாழன் என இரு நாட்கள் விடுமுறை என்பது உறுதியாகியுள்ளது. மேலும், இரு நாட்களுக்கு பின் வெள்ளிக்கிழமை வருவதால் ஊழியர்கள் இம்மாத இறுதியில் தொடர்ந்து நீண்ட நாள் விடுமுறை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.