வளைகுடா செய்திகள்

அமீரகத்தைத் தொடர்ந்து பஹ்ரைனிலும் முதல் கோல்டன் ரெசிடென்ஸி விசாவை பெற்ற லூலூ தலைவர் யூசுப் அலி..!!

பஹ்ரைன் அரசானது கடந்த வாரத்தில் வெளிநாட்டவர்களுக்கான 10 வருட கோல்டன் ரெசிடென்ஸி விசா வழங்க திட்டமிட்டிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்த விசாவைப் பெறுவதற்கான தகுதிகளையும் அரசு தெரியப்படுத்தியிருந்தது.

அதன்படி ஒருவர் பஹ்ரைனில் குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் வசித்திருந்து சராசரியாக மாதம் ஒன்றுக்கு 2,000 பஹ்ரைன் தினார் ($5,306) சம்பளம் ஐந்து வருடங்களில் பெற்ற நபர்கள், ஒரு குறிப்பிட்ட மதிப்புக்கு (குறைந்தது 200,000 தினார்) மேல் பஹ்ரைனில் சொத்துக்களை வைத்திருப்பவர்கள், 4,000 தினார் மாதம் பெறும் ஓய்வு பெற்றவர்கள், சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் மிகவும் திறமையான நபர்கள், முதலீட்டாளர்கள் போன்றோர் இந்த விசாவைப் பெற தகுதி பெறுவார்கள் எனவும் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் மிகவும் புகழ்பெற்ற தொழிலதிபரும் லூலூ குழுமத்தின் தலைவருமான எம்.ஏ.யூசுப் அலி அவர்கள், பஹ்ரைனின் முதல் கோல்டன் ரெசிடென்ஸி விசா பெற்றுள்ளதாக லூலூ குழுமம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

இது குறித்து யூசுப் அலி தெரிவிக்கையில், “இன்று இந்த கௌரவத்தைப் பெறுவது எனது வாழ்க்கையில் மிகவும் பெருமையாகவும், பணிவாகவும் இருக்கிறது. மாண்புமிகு மன்னர் ஹமத் பின் ஈசா அல் கலீஃபாவிற்கும், பஹ்ரைன் அரச அதிபரும் பட்டத்து இளவரசர் மற்றும் பஹ்ரைன் பிரதமருமான சல்மான் பின் ஹமத் அல் கலீஃபாவுக்கும் பஹ்ரைன் அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது கோல்டன் விசா எண் 001ஐப் பெற்ற பிறகு கூறியுள்ளார்.

யூசுப் அலி பஹ்ரைன் மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து, தனக்கு கோல்டன் விசா தந்து கவுரவப்படுத்தியதற்காக நன்றி தெரிவித்து பஹ்ரைனின் பொருளாதார வளர்ச்சிக்கான தனது உறுதிப்பாட்டை வலுப்படுத்தியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் “இந்த புதிய நிரந்தர ரெசிடென்ஸி வழங்கும் முயற்சியானது, பிராந்தியத்தின் முக்கிய முதலீடுகள் மற்றும் வணிக மையங்களில் ஒன்றாக பஹ்ரைனின் கவுரவத்தை மேலும் உயர்த்தும், அத்துடன் புதிய முதலீட்டாளர்களை பஹ்ரைனிற்கு ஈர்க்கவும் தக்கவைக்கவும் உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

இதே போன்று அமீரகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டவர்களுக்கு   கோல்டன் விசா வழங்கப்படுவதாக அறிவித்த போது அதனைப் பெற்ற முதல் வெளிநாட்டவர் இவரே ஆவார். அத்துடன் கடந்த 2014 இல் ஹமாத் அரசரிடமிருந்து பஹ்ரைனின் உயரிய கௌரவமான ‘வெஸ்ஸாம் அல் பஹ்ரைன்’ (Wessam Al Bahrain) பெற்ற முதல் பஹ்ரைனி அல்லாத வெளிநாட்டவர் யூசுப் அலி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!